பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவராக வந்த இறைவன்! தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளம், மிக்க நன்றிகள்! சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர். இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந...