Skip to main content

சுந்தரருக்கு மனைவியிடம் ஏற்பட்ட பிணக்கை தீர்க்க ஆதிசைவராக வந்த சிவன்!


பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவராக வந்த இறைவன்!

தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளம், மிக்க நன்றிகள்!  

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தை, முதியவர் வடிவில் வந்து தடுத்தாட்கொண்டார் சிவபெருமான். பின்னர் திருவாரூரில் இருந்தபடி ஆலயங்கள் தோறும் சென்று திருமுறை திருப்பாட்டு பாடும் வரத்தை அளித்தார். தன்னுடைய தோழனாகவும் சுந்தரரை ஆக்கிக் கொண்டார். சுந்தரர் தினமும் தனது திருவாரூர் ஆலயத்திற்குச் சென்று தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். அப்படி ஒரு முறை செல்லும் போது பரவை நாச்சியாரை கண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முன்வினை பயனாக அவர்களுக்குள் காதல் புகுந்தது. இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர். அதோடு இருவரும் சேர்ந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு தொண்டாற்றியும் வந்தனர்.

இந்த நிலையில் பரவை நாச்சியார் திருவாரூரிலேயே தங்கிவிட, சுந்தரர் சிவாலய தரிசனத்திற்காக யாத்திரை மேற்கொண்டார். பல சிவாலயங்கள் சென்று ஈசனைப் பணிந்து பாடி, தான் வேண்டி யவற்றையும், தன் அன்பர்கள் வேண்டியவற்றையும் கேட்டுப் பெற்றார் சுந்தரர். தல யாத்திரையின் ஒரு பகுதியாக திருவொற்றியூர் ஈசனை வழிபடுவதற்காக வந்தார். அங்கு சங்கிலி நாச்சியார், ஈசனுக்கு பூ கட்டி தொண்டாற்றிக் கொண்டிருந்தார்.

சுந்தரர் திருவொற்றியூர் ஆலய தரிசனத்திற்காக வந்த போது, சங்கிலியிடம் காதல் வயப்பட்டார். தொடர்ந்து ஈசனிடம் சென்று, சங்கிலியிடம் தனக்காக சென்று பேசி, தனக்கும் சங்கிலிக்கும் மணம் செய்து வைக்கும்படி வேண்டினார்.

ஈசனும் அதற்கு ஒப்புக்கொண்டு சங்கிலி நாச்சியாரிடம் சென்று, சுந்தரரை மணந்து கொள்ளும்படி அருளினார். உடனே சங்கிலியார், “சுந்தரர் ஏற்கனவே பரவையாரை மணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே நான் எப்படி அவரை மணக்க முடியும்?” என்று ஈசனிடம் கேட்டார்.

அதற்கு ஈசன், அவளை விட்டு சுந்தரர் பிரிந்து செல்லாதபடி சத்தியம் வாங்கித் தருவதாக கூறினார். இதையடுத்து சுந்தரரை மணக்க சங்கிலி நாச்சியார் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவொற்றியூரிலேயே தங்கியிருந்து சிவதொண்டு செய்து வந்தனர். சில காலம் சென்றது.

திருவாரூரில் வசந்தவிழா விசேஷம் வந்தது. அதை பார்க்க வேண்டும் என்ற ஆவல் சுந்தரருக்கு பிறந்தது. அதனால் சங்கிலி நாச்சியாருக்கு கொடுத்த வாக்கை மீறி, ஊர் எல்லையைத் தாண்டிச் சென்றார் சுந்தரர். வாக்குறுதியை மீறியதும் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. அதன்பின் பல சிவத்தலங்களுக்குச் சென்று, பார்வை வேண்டிப் பதிகங்கள் பாடினார், சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால், திருவெண்பாக்கம் என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோலை மட்டும் கொடுத்தார் ஈசன்.

அதைப் பெற்றுக்கொண்டு, தன் அடியார்களின் உதவியுடன் பல சிவதலங்களை தரிசிக்கச் சென்றார், சுந்தரர். ஒரு கட்டத்தில் காஞ்சீபுரம் வந்து ஏகாம்பரநாதரை வணங்கினார். அங்கு ஏகாம்பரநாதரை உருகிப் பாடினார். இதில் மனம் மகிழ்ந்த ஈசன், சுந்தரருக்கு இடது கண் பார்வையை வழங்கினார். பின்னர் அங்கிருந்து இன்னும் சில சிவ தலங்களுக்குச் சென்று வழிபட்ட சுந்தரர், திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கு ஈசனிடம் மன்றாடி வலது கண் பார்வையையும் பெற்றார்.

இந்த நிலையில் சங்கிலி நாச்சியாரை சுந்தரர் திருமணம் செய்தது பற்றிய தகவல் அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரை தன்னுடைய மாளிகைக்குள் விட மறுத்தார். சிவனடியார்கள் பலரும் சுந்தரருக்காக சமாதானம் பேசிப் பார்த்தும் பலனில்லை. மனம் நொந்து போன சுந்தரர், நேராக திருவாரூர் ஆலயம் சென்று தியாகேசப் பெருமானை சரணடைந்தார். தனக்காக பரவையாரிடம் தூது செல்லும்படி வேண்டினார். அதன்படியே திருவாரூர் ஆலய சிவாச்சாரியார் வேடத்தில் சென்று, பரவையாரிடம் சமாதானம் பேசினார் சிவபெருமான். அதற்கும் பரவையார் மனம் இரங்கவில்லை.

தூது சென்ற சிவபெருமானுக்காக இரவு நேரத்திலும் காத்துக் கொண்டிருந்தார் சுந்தரர். அங்குவந்த ஈசன், “சுந்தரா! பரவையிடம் சமாதானம் பேசிப் பார்த்தேன். அவள் உன்னை ஏற்க மறுக்கிறாள்” என்றார்.

அதைக் கேட்ட சுந்தரர், “ஐயனே! தேவர்களைக் காக்க நஞ்சு உண்டீர்; மார்க்கண்டேயனை எமனிடம் இருந்து காத்தருளினீர். அப்படிப்பட்ட நீங்கள் உங்களை நம்பிய என்னை கைவிடலாமா? பரவையாரிடம் நான் மீண்டும் சேர நீங்கள்தான் வழி செய்ய வேண்டும்' எனக்கூறி ஈசனின் திருப்பாதங்களில் பணிந்தார்.

அவரது பக்திக்கு இரங்கிய ஈசன், “சுந்தரா! உனக்காக இந்த நள்ளிரவிலும் மீண்டும் நாம் தூது செல்வோம். வருந்த வேண்டாம்” எனக்கூறினார். பின்னர் தன் சுய உருவத்துடனேயே பூத கணங்கள், தேவர்கள், முனிவர்கள் சூழ வீதியிலேயே நடந்து வந்து கொண்டிருந்தார். பரவை நாச்சியாரின் மாளிகை முன்புறம் திருக்கயிலைப் போல காட்சியளித்தது. சிவபெருமானைக் கண்ட பரவை நாச்சியார் ஓடி வந்து அவரது காலில் விழுந்து வணங்கி நின்றார்.

ஈசன் பரவையாரிடம், “பரவையே! தோழன் என்ற உரிமையோடு சுந்தரன் எம்மை அனுப்பிய காரணத்தினால், மீண்டும் உன் முன் வந்தேன். உன்னுடைய இல்லத்திற்கு சுந்தரன் மீண்டும் வருதல் வேண்டும். அதுவே எம்முடைய விருப்பம்” என்றார்.

“பெருமானே! தங்கள் திருவடி நோக திருவாரூர் வீதியில் நடந்து வந்ததைக் கண்ட பிறகும் நான் இசையாது இருப்பேனோ! நாங்கள் கூடி வாழ்கிறோம்” என்று கூறினார், பரவை நாச்சியார். அவருக்கு அருளாசி கூறிய சிவபெருமான், சுந்தரரிடம் சென்று, “சுந்தரா! நீ உடனே உன் பரவையிடம் செல்வாயாக” என்று கூறிவிட்டு கருவறைக்குள் சென்று மறைந்தார். முன்புபோல் சுந்தரரும் பரவையாரும் மீண்டும் ஒன்றிணைந்து சிவத்தொண்டுகள் புரியலாயினர்.


ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு, தலவரலாறு

இறைவன் ஆதி சைவராக வந்தது:

திருவையாற்றில் இறைவனுக்கு பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் 24 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் காசி யாத்திரை மேற்கொண்டார். நெடுநாள் ஆகியும் அவர் திரும்பி வராததால் அவருக்குரிய நிலபுலன்கள் மற்ற சொத்துக்களை தமக்கே உரிமை என்று ஏனைய 23 ஆதி சைவ அந்தணர்களும் கைப்பற்றிக் கொண்டனர். காசி யாத்திரை சென்ற ஆதி சைவரின் மனைவியும், மகனும் இறைவனிடம் நடந்ததை முறையிட்டு வேண்டினார்கள். அவர்களுக்கு அருள் புரியவும் மற்ற அந்தணர்களுக்கு பாடம் புகட்டவும் எண்ணிய சிவபெருமான் காசிக்குச் சென்ற அந்தணர் உருவத்தில் கங்கை நீருடன் ஐயாரப்பர் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு பூஜையும் செய்தார். மனைவியும், மகனும் மகிழ மற்ற 23 அந்தணர்களும் ஒடுங்கிப் போயினர். சில நாட்கள் கழித்து உண்மையான அந்தணர் காசியில் இருந்து கங்கை நீருடன் திரும்பிவர, இருவரில் யார் உண்மையான ஆதி சைவர் என்ற குழப்பம் ஏற்பட்டது. உண்மை அறியும் பொருட்டு யாவரும் கூடியிருக்க முதலில் வந்த ஆதி சைவர் திடீரென்று மறைந்துவிடுகிறார். வந்தவர் சிவபெருமானே என்று எல்லோரும் உணர்கின்றனர். இவ்வாறு ஆதி சைவராக வந்து தனக்குத் தானே பூஜை செய்து கொண்டவர் இத்தலத்து இறைவன் ஐயாரப்பர்.


 தல சிறப்பு:

 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
ஐயாறப்பன் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம்.சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது

 ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.

 சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.

 காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். மற்ற 5 சிவஸ்தலங்கள் 1. திருவெண்காடு, 2. சாயாவனம், 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர் மற்றும் 5. திருவாஞ்சியம்.

 நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.

 நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.

 இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.

 அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.

 சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.

 இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

 கோயில் என்றாலே சுவாமி சன்னதியை சுற்றுவது முக்கியமான அம்சம்.ஆனால், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சன்னதியை சுற்றக்கூடாது என்ற தடை உள்ளது.

 சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, கங்கையாறு, பாலாறு, நந்திவாய்நுரை இவை ஐந்தும் இங்கே கலப்பதால் இத்தலம் “பஞ்சநதம்” எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.


 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.

 அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்

 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.


பிற சிறப்புகள்:

 இத்திருக்கோவில் முதன் முதலாக "பிரியவிரதன்" எனும் சூரிய வம்ச  சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு.  கி.மு. முதலாம் நூற்றான்டில் வாழ்ந்த  சோழப்பேரரசன் "கரிகாற்பெருவளத்தான்" இவன் காடு கெடுத்து நாடாக்கி வளம் பெருக்கியவன்,  கல்லணை கட்டி, காவிரிக்கு கரை எழுப்பி, இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில்,  ஐயாற்றை அடைந்ததும், அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. 

  "இதன்  அடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது"  என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான்.  அடியில்  சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள், சண்டர், சூரியன் திருஉருவங்களும் யோகி  ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றி காணப்பட்டன.  மேலும் அகழவே,  நியமேசர் எனும் அகப்பேய் சித்தர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம்,  "தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட மகாலிங்கத்திற்கும் கோவில் எடுப்பாயாக" எனக் கூறி எவராலும்  வெல்லற்கரிய தண்டமொன்றும் அளித்து கோவில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின்  குலம் படியில் கிடைக்கு என அருள் புரிந்தார். 

 அது போலவே கரிகாற்சோழன் சிறப்பாக கோவில்  கட்டி, குடமுழுக்கும் செய்து, நிவந்தங்களும் அளித்தான்.  கரிகாற் சோழனுக்கு ஐயாறப்பரே என்ற  எல்லாம் வல்ல சித்தர் வடிவில் வந்து, சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடத்தை காட்டி கோவில்  கட்ட செய்தான்.  ஆதரமாக, கர்ப்பகிரகத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் சென்று மிதிக்ககூடாது என்பதும், சோழனால் கட்டப்பட்ட செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாகி இருப்பதும் -கரிகாலசோழன், அவர் மனைவி, இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உணரலாம்.

 இவ்வாலயத்தின் மூலத்தானம் அமைந்திருக்கும் ஐயாறப்பர் சந்நிதி அகப்பேய்சித்தர் சித்தம் கொண்டு ஸ்தாபித்ததாகத் தலவரலாறு கூறுகிறது. மூலத்தான விமானத்தின் மேல் பகுதியில் காணப்படும் பல்வகைச் சித்தர்களின் திருவுருவங்கள் இதற்குச் சான்று பகர்கின்றனர். இது தவிர ராஜராஜ சோழனின் பத்தினியான ஓலோக மாதேவியாலும், ராஜேந்திர சோழனின் பத்தினியான பஞ்சவன்மா தேவியாலும் இங்கு வட கைலாயம், தென் கைலாயம் என இரு ஆலயங்களை நிர்மாணம் செய்யப்பட்டிருக்கின்றன.

 பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர், மராட்டியர் காலங்களில் இவை வெட்டப்பட்டவை. மூலத்தானம் பல்லவர்களாலும், மூன்றாம் திருச்சுற்று விக்கிரம சோழனாலும் எழுப்பபெற்றமை தெரிகிறது. மேலை கோபுரம், முதல் சுற்று, நடை, திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தென்கோபுரம் ஆகியவை பின்னாளில் அறம் காக்கும் மரபுடையோரால் கட்டப்பட்டவை.

 முதல் இராஜராஜ சோழன் காலத்தில் இத்தலத்துக்கு “பொய்கை நாட்டுத் திருவையாறு”  எனப் பெயர் வழங்கியது. இப்போது நினைத்தால் அதிசயிக்க வகையில் அந்நாளில் நிர்வாகத் துறையில் இவ்வாலய நிர்வாகப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரியை “அதிகாரிச்சி”  எனும் சொல்லால் அழைத்திருக்கின்றனர். அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அகற்றும் பணி செய்வோரை “நிர்மால்ய நீர் போக்குவான்”  என அழைத்தனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவிந்த தீக்ஷதர் வழிகாட்டுதலில் இங்கு காவிரிக் கரையில் பல படித்துறைகள் கட்டப்பட்டன. அப்படிக் கட்டப்பட்ட படித்துறைகளில் புஷ்யமண்டபப் படித்துறை சிறப்பு வாய்ந்தது.

 திருநாவுக்கரசர் ஐயாறப்பரைப் பாடும்போது “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே”  எனக் குறிப்பிடுகிறார். அப்பரின் இந்த வாக்கியத்தை மெய்ப்பிப்பது போல இவ்வாலயத்தின் மேலைப் பிரகாரத்தில் நின்று குரல் கொடுத்தால் அவ்வொலி ஏழு முறை எதிரொலிக்கும் அதிசயமும் இங்கே இருக்கிறது. கரிகால் சோழனின் தேர் இங்கு அழுந்த அங்கு தவத்திலிருந்த அகப்பேய்சித்தர் உணர்த்தியபடி இவ்வாலயம் எழுப்பப் பட்டதாகத் தல வரலாறு சொல்கிறது.

 திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் இது முதன்மையான தலம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து, ஈசன் அருளால் சிரஞ்சீவித்துவம் பெற்று, கணங்களுக்குத் தலைவருமான நந்தி பகவான் தன் திருமணத்திற்குப் பிறகு திருவையாறு ஐயாறப்பர் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கும் தன் இல்லாளுடன் சென்று ஈசனைத் தொழுதாராம். அச்சிறப்பின் சம்பிரதாயமாக, இன்றும் சித்திரைத் திருவிழாவின் கடைசி நாளன்று திருவையாறு ஐயாறப்பர் கோயிலின் உற்சவர் திருவையாறைச் சுற்றியுள்ள ஏழு தலங்களுக்கு பவன் வருவது வழக்கம் அவை திருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படும். அவையாவன:
🌻 1.திருவையாறு,
🌻 2.திருப்ப ழனம்
🌻 3. திருச் சோற்றுத்துறை.
🌻 4. திருவேதிக்குடி
🌻 5.திருப் பந்துருத்தி,
🌻 6. திருக்கண்டியூர்; மற்றும்
🌻 7. திருநெய்த்தானம் - ஆகியவையாகும்.

 இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பருக்கு செம்பொற்ஜோதி, செப்பேசர், கயிலைநாதர், பிராணதார்த்திஹரர் எனும் பெயர்களும் உண்டு. இவை தவிர திருவையாறுடைய மகாதேவர் என்றும் இறைவியை உலகுடைய நாச்சியார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஐயாறப்பர் லிங்கத் திருமேனி சுயம்புவானதால் இங்கு புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படும், இவருக்குத் தீண்டாத்திருமேனி நாதர் என்னும் பெயரும் உண்டு.

 திருக்கடவூரில் மார்க்கண்டனின் உயிரைக் காக்க சிவபெருமான் காலனை உதைத்த வரலாறு நமக்கெல்லாம் தெரியும். அதுபோலவே இந்தத் தலத்தில் சுசரிதன் எனும் அந்தணச் சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனை தண்டித்த வரலாறும் இங்கு உண்டு. எனவே இவ்வாலயத்தில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சந்நிதியில் செய்து கொள்வது சிறப்பு.



 இங்கே அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள்.எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.


 சிவனுக்கு வடைமாலை: ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவார்கள். ஆனால் ஈசுவரனுக்கு ஒரு கோயிலில் வடைமாலை சாத்துகிறார்கள். இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சிலசமயங்களில் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள்கூட சாற்றப்படுவதுண்டு.

ஆமையை மிதித்த தெட்சிணாமூர்த்தி:

 இங்குள்ள தட்சினமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சினாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சினாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள்.


 சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.


 நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரியபகவான் இத்தலத்தில் பூஜித்துள்ளார். இக்கோயில் ஐந்து பிரகாரங்களை கொண்டது. இங்குள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனம் நிம்மதி கிடைக்கிறது. சூரியன் இந்த கோயிலில் மேற்கு திசை நோக்கி உள்ளார்.

 திருப்புகழ் தலம்: 

 இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக "தனுசுசுப்ரமணியம்" என்ற பெயருடன் விளஙகுகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது.

 அப்பர் கண்ட கைலாயம்: 

திருநாவுக்கரசர் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க விரும்பினர். காசியில் தன்னுடன் வந்த அடியார்களை தங்கியிருக்குமாறு சொல்லிவிட்டு தனித்துப் புறப்பட்டார். கைலாயப் பயணம் மிகவும் கடினமாக இருந்ததால் முதலில் நடந்து சென்ற அவர் பிறகு நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லத் தொடங்கினார். திருநாவுக்கரசர் படும் சிரமத்தைப் பார்த்த இறைவன் அவரை ஆட்கொள்ள நினைத்தார். திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாடவேண்டும் எனக் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செய்வது சாத்தியமில்லை என்று சொன்னர். அதற்கு அப்பர் “ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” என மறுத்தார். அருகில் ஒரு குளத்தை ஏற்படுத்தி ஒரு முனிவர் வேடத்தில் அவரை நெருங்கி கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களை எடுத்துக் கூறி திரும்பிச் செல்லும்படி கூறினார். இறந்தாலும் கைலைநாதனைக் காணாமல் ஊர் திரும்ப மாட்டேன் என்ற உறுதியுடன் இருந்த திருநாவுக்கரசரை ஆகாயத்தில் இருந்து அசரீரியாக அழைத்த சிவபெருமான் அப்பரிடம் ஆங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக!” எனப் பணித்தார். (அங்குள்ள குளத்தில் மூழ்கி திருவையாற்றில் எழுவாய்! அங்கே உனக்கு கைலாயக் காட்சி தருகிறேன் என்று அருளினார்.’) அவ்வண்ணமே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலை காட்சி அருளினார்..

மாதர் பிறைகண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதோடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாம லையா றடைகின்றபோது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் - என்ற பாடலுடன் தொடங்கும் பதிகம் பாடி இறைவனை தரிசித்தார். இந்த வரலாற்றை உணர்த்தும் வகையில் ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் உள்ள வடகைலாயம் (ஓலோகமாதேவீச்சரம்), தென்கைலாயம் ஆகிய இரண்டும் காண வேண்டிய ஒன்றாகும். ஆடி அமாவாசை தினத்தில் இங்கு நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையதாகும். அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர்.


 கோவில் அமைப்பு:

 திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும்.

 திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும்.

 முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது.

 இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

 மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன.

 ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன.

 இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.


 இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை.. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது.

 மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது.. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.

 இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன.

 மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

 திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது.

 இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

 தல வரலாறு: 

நந்தீஸ்வரருக்கும், நந்திகேசருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பவர். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையை சேர்ந்தவை.

 சிலாத முனிவர் என்பவர் மக்கட்பேறு இல்லாததால் மிகவும் வருந்தி, ஐயாறப்பனை வேண்டினார். அதற்கு சிவபெருமான் அவர் முன்தோன்றி "சிலாதரே! நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய். யாகம் செய்து பூமியை உழும்போது ஒரு பெட்டி கிடைக்கும். அதில் ஒரு புத்திரன் இருப்பான். அவனுக்கு ஆயுள் பதினாறு. அவனை எடுத்துக்கொள்" என்றார்.

 அப்படியே அந்த முனிவரும் யாகம் செய்ய ஒரு பெட்டியும் அதில் நான்கு தோட்கள், மூன்று கண்கள், சந்திரனை அணிந்த முடியோடு ஒரு மூர்த்தி இருக்கக்கண்டார். "பெட்டியை மூடித்திற" என்ற அசரீரி கேட்க சிலாத முனிவரும் அங்ஙனமே செய்தார். இப்போது பெட்டிக்குள் ஓர் அழகிய குழந்தை இருக்கக்கண்டார். சிலாத முனிவர் அக்குழந்தையை எடுத்து செப்பேசுவரர் எனப்பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தார். அந்த குழந்தைக்கு கல்வியைப் புகட்டினார். பதினான்கு வயதிற்குள் அது சகலகலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கியது.

 இந்தக் குழந்தைக்கு மார்க்கண்டனைப் போல பதினாறு வயதுதானே என்று நினைவுக்கு வந்தது. அந்தக் குழந்தை ஐயாறப்பனைப் பூசித்து கடுந்தவம் புரிந்தது. நீருக்குள் நின்று அக்குழந்தை தவமியற்றியதால் அங்கிருந்த மீன்கள் முதலானவை அவர் உடலை அரித்துத்தின்றன. பெற்றோர் வருந்தினர். அந்தக்குழந்தையின் கடுந்தவத்தை மெச்சி இறைவன் காட்சி கொடுத்து, அதற்கு எல்லா பேறுகளையு வரங்களையும் கொடுத்துமறைந்தார்.

 அப்போதுவெரும் எலும்புக்கூடாக மட்டும் காட்சியளித்த அந்தக்குழந்தையின் பரிதாபநிலைகண்டு ஈசன் அந்த எலும்புக்கூட்டுக்கு கங்கைநீர், மேகநீர், பிரமனின் கமண்டலநீர், அம்மையின் தாய்ப்பால், இடபதேவரின் வாய்நுரைநீர் இவை கொண்டு தாமே அபிஷேகம் செய்ய, அந்தக் குழந்தை சூரியப்பிரகாசத்துடன் புதியப்பொலிவுடன் எழுந்தது.

 சிலாத முனிவர் பிறகு வியாக்ரபாத முனிவருடைய மகளும், வசிஷ்டமுனிவரின் பெளத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம்பிரகாசை எனும் பெண்ணைத் தன்மகனுக்கு பங்குனிமாதத்தில் புனர்பூசநக்ஷத்திரத்தில் திருமணம் செய்வித்தார். செப்பேசர் எனும்பெயர் கொண்ட அந்த இளைஞன் கயிலையில் சிவகணங்களுக்குத் தலமைப்பதவியையும், முதல் வாயிலைக்காக்கும் உரிமையையும், சிவாச்சாரியாருள் முதல்வராக இருந்து பணிபுரியும் வரத்தைப் பெற்று வாழ்ந்தார்.

 இறைவனிடம் இருந்து நந்தி எம்பெருமான் என்று பட்டம் பெற்ற இவர்தனது திருமணவயதில் திருமழபாடியில் பிறந்த வியாக்கிரபாதர் என்பவரின் மகள் சுயம்பிரபை என்ற பெயர் கொண்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொண்டவர். சுயஜ்ஜை என்ற பெயரும் இந்த பெண்ணுக்கு உண்டு.  நந்தி எம்பெருமான் சுயம்பிரபை இருவரின் திருமணம் திருமழபாடியில் நடைபெற்றது. நந்தி என்ற சொல்லுக்கு எப்போதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள்படும். இவர் ஒரு சித்தர். இளமையும் திட்பமும் வாய்ந்தவர். சாந்தமானகுணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். பிரமன், திருமால், இந்திரன், தேவர்கள் மற்றும் முனிவர்களால் போற்றி துதிக்கப்படுபவர். ஐந்தெழுத்தாம் சிவாயநம: என்னும் உருவத்தைக் கொண்டவர். பக்தியில் சிவபெருமானுக்கு சமமானவர். பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர்.

 வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றி பெற முடியாதவர். பூஜிக்கத் தக்கவர்களில் முதல்வர். அனைவருக்கும் சிறந்தவர். எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்படியான வரத்தைப் பெற்றவர். நந்தி எம்பெருமான் இறைவனிடத்தில் (சிவனிடத்தில்) சென்று தேவர்களின் குறைகளை முறையிட்டு அவர்களின் துன்பத்தைப் போக்கியவர். அதனால் தான் பிரதோஷகாலத்தில் நந்தி எம்பெருமானுக்கு முதலில் பூஜை நிகழ்கிறது. சிவதரிசனத்தில் முதலாவதாக நாம் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது நந்தி எம்பெருமானை தரிசிப்பது ஆகும். நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே இறைவனை தரிசிப்பது நம் வேண்டுகோளை நந்தி எம்பெருமான் ஈசனுக்கு தகுந்தநேரத்தில் பக்குவமாக எடுத்துச்சொல்லி நிறைவேற்றிவைப்பார் என்பதால்தான். நந்தி எம்பெருமானுக்கு திவ்விய வடிவமும் நெற்றிக்கண்ணும், நான்குபுயங்களும், கையில்பிரம்பும், உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானையுரியும், இருபுயங்களில்மானும் மழுவும் உண்டு.

 மான்வேகத்தைக் குறிக்கிறது மழுவீரத்தைக் குறிக்கிறது என்பர் எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரம் நந்தி எம்பெருமானுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நந்தி எம்பெருமான் சிவனிடத்தில் இருந்து சிவ ஆகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்பர். தப்பிதம் செய்தாரை தண்டிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. இவர் சிவ சன்னதியில் காவல் பூண்டுள்ளார். அவரின் அனுமதி பெற்றுத்தான் சிவபெருமானை வணங்க வேண்டும். நந்தி எம்பெருமான் தக்ஷயாகத்தில் பழித்துப்பேசிய தக்ஷனையும் உடனிருந்த தேவர்களையும் சபித்தார். இவர் சிவயோகத்தில் மிகவல்லவர். திருக்கயிலாயத்தில் திருமந்திரம் என்னும் நூலை எழுதிய திருமூலருக்கு நந்திஎம்பெருமான் ஒன்பதுவேத ஆகமங்களை விளக்கி அருளினார். அதன்பின் திருமூலர் பூலோகத்துக்கு வந்து மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகம் புரிந்தார். திருமூலர் தான் எழுதிய திருமந்திரம் என்னும் நூலில் நந்திஎம்பெருமானை சைவசமயத்திற்கு தனிநாயகன் என்று குறிப்பிடுகின்றார். மேலும், சிவபெருமானின் சீடர்களில் முதல்நிலை உடையவர் என்றும் அவரால்தான் நான் ஆசிரியன் ஆனேன் என்றும் குறிப்பிடுகின்றார்.

   நந்தி எம்பெருமானுக்கு சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர், பதஞ்சலி, சிவயோகமாமுனி, வியாக்கிரமர் என்ற ஏழுபேர் மாணவர்களாக இருந்தனர். எட்டாவது மாணவராக திருமூலர் வருகின்றார். நந்திஎம்பெருமானின் மாணவர்களாக விளங்கிய மேற்குறித்த எட்டுபேரும் சைவசமயத்தின் மேன்மையை விளக்கவும், சிவ வழிபாட்டைப் பரப்பவும் சிவபரம் பொருளின் பெருமையைப் பற்றியும், நந்திஎம்பெருமானின் மரபைப்பற்றியும், தங்கள் அனுபவத்தின் மூலம் எடுத்துச்சொல்ல நமது புனிதநாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தனர். ருத்திரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்கவாத்ய ப்ரியன், சிவவாஹனன், கருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன் போன்றவை நந்தி எம்பெருமானின் இயற்பெயர்கள். நந்திதேவர் இங்கு ஏழுகோடி முறை ருத்ரஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாடப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் பெயராகவே இத்தலம் திருவையாறு என அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

 சிறப்பம்சம்:

 அதிசயத்தின் அடிப்படையில்:

 திருவையாற்றுக்கு உரிய சிறப்பு ஆடி அமாவாசை அப்பர் கயிலாயக் காட்சி திருவிழா, "யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது'' என்ற அப்பரின் திருவாக்கின்படி நாமும் இந்நாளில் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் காண்போம். அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அருள்மிகு ஐயாறப்பருடன் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் அந்த பக்திப்பரவசமான காட்சியை காணக் கண்கோடி வேண்டும். திருவையாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் பெறலாம். மேலும் திருக்கயிலைக்கு யாத்திரை மேற்கொண்டவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலையை தரிசித்ததன் புண்ணியம் முழுமையாக கிடைக்கும்.

 இவ்வூரில் சித்திரை மாதம் பெளர்ணமி விசாகத்தில் “ஸப்த ஸ்தானப் பெருவிழா” நடைபெறுகிறது. இவ்வேழூர் இறைவனும் அம்மையப்பராகக் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர். இவ்வூருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. அது, “அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்கிற திருமுறை வாக்கின்படி இங்கு அம்பிகை தர்மசம்வர்த்தினி அரியின் அம்சமாகக் கருதப்படுதலால் இங்கு திருமாலுக்கென்று தனி ஆலயம் எதுவும் இல்லை.

 இங்குள்ள தியான மண்டபம் கட்டப்பட்ட விதம் அபூர்வமானது. சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து இது கட்டப்பட்டது. இந்த பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.


Click to read கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 84)

சுந்தரர் முழு வரலாற்றை கீழ்கண்ட இணைய தளத்தில் படிக்கலாம்.


திருச்சிற்றம்பலம்


Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...