Skip to main content

மெய்க் காட்டிட்ட படலம்


மெய்க் காட்டிட்ட படலம் 


பூஷணின் ஆட்சிக்காலத்தில், சேதிராயன் என்ற குறுநில மன்னன், பல பெரிய நாடுகளிலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தன்னை பேரரசனாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டான். 15 பெரிய நாடுகள் மீது அவனுக்கு கண் இருந்தது. அதில் பாண்டிய நாடும் அடக்கம். இந்தத் தகவல் ஒற்றர்கள் மூலமாக குலபூஷணனுக்கு கிடைத்தது. அப்போது, பாண்டியநாட்டின் சேனாதிபதியாக சவுந்தர சாமந்தன் என்பவன் இருந்தான். சாமந்தன் மிகப்பெரிய வீரன். அவனது தலைமையில் பாண்டியப்படைகள் ஏதாவது ஒருநாட்டிற்குள் நுழைகிறது என்றால், அந்த நாட்டின் தலைவன், யாரும் சொல்லாமலே ஓடிவந்து சரணடைந்து விடுவான். அந்தளவுக்கு பலசாலியானாலும் பக்திமானாகவும் விளங்கினான் சாமந்தன். அவன் சிறந்த சிவபக்தன். கையில் வாளெடுத்து போர் செய்யும் கொடும் தொழிலுக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும், நெற்றி நிறைய திருநீறு அணிய அவன் மறந்ததில்லை. தினமும், மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் கோயிலுக்குச் சென்று வணங்கத்தவறியதில்லை. எங்கேனும் போர்க்களத்துக்கு சென்றுவிட்டால், அந்த இடத்தையே சொக்கநாதரின் கோயிலாக பாவனை செய்து வணங்குவான். அந்தளவுக்கு மகாபக்திமான் சவுந்தர சாமந்தன். அவனை அழைத்த குலபூஷணன், சேனாதிபதியாரே! குறுநில மன்னன் சேதிராயன் நம் நாட்டைத் தாக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அவனது நால்வகைப் படையும் தயார் நிலையில் இருக்கிறதாம். அவன் வருவதற்குள் நாம் நமது படைபலத்தை மேலும் பெருக்க வேண்டும். இதற்கு பெரும் செலவு ஆகும். நீர் அரண்மனைக் கஜானாவிற்கு சென்று, வேண்டுமளவு பொருள் எடுத்துக் கொள்ளும். படைபலத்தைப் பெருக்க நடவடிக்கை எடும், என்றான். சாமந்தனும் அதை ஏற்று, அரசே! சேதிராயன் குறி வைத்துள்ள மற்றநாடுகளின் தலைவர்களிடமும் பேசுகிறேன். படைபலத்தை விரைவில் பெருக்குகிறேன், என்றான். கஜானவிற்கு சென்ற அவன் பை நிறைய பொன்னும் பொருளும் அள்ளிக் கொண்டான். வீட்டிற்கு வந்த அவன் பணமூட்டையைப் பிரித்துப் பார்த்தான்.
என்ன உலகம் இது! ஆயுதங்களை அதிகரிப்பதற்கும், பிறர் மீது படையெடுத்து அவரவர் நிலத்தை ரத்த பூமியாக்குவதற்குமா இந்த செல்வம் பயன்பட வேண்டும். எந்த நாடாக இருந்தாலும், படைபலத்திற்கு தானே அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது! பாதுகாப்புக்காக செலவிடும் இந்தத் தொகையை ஆன்மிகம் தழைக்க செலவிட்டால், பலருக்கும் பல வசதிகள் கிடைக்குமே! உலகத்தில் அமைதி பொங்குமே! என எண்ணினான். ஆம்...இந்த பணத்தை படைபலம் பெருக்க பயன்படுத்தக்கூடாது. சிவனடியார்களின் தொண்டுக்கு பயன்படுத்துவோம், என முடிவே செய்து விட்டான். களஞ்சியத்திலுள்ள பொருளை எடுத்துக் கொண்டு, சிவனடியார்களை நோக்கிச் சென்றான் சாமந்தன். அவர்களுக்கு தேவைப் படுமளவு வாரி வழங்கினான். திருக்கோயில்களை சீரமைக்க பெரும் பணத்தை செலவிட்டான். மனநிறைவு பிறந்தது. படை திரட்டாமல் போனால், பாண்டியன் தரும் தண்டனையை ஏற்கவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கவலைப்படவில்லை. ஆனால், இந்த பணத்தை இவனே பதுக்கிக் கொண்டதாக கெட்ட பெயர் வருமே! அப்படி ஒரு கெட்ட பெயர் வந்தால், மக்கள் மத்தியில் நடமாட முடியாதே! எல்லோரும் தனக்கு அரசதுரோகி என்று பட்டம் கட்டிவிடுவார்களே! என்றெல்லாம் கவலைப்பட்டான். தன் மனக்கவலைக்கு மருந்து தேடி சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் சென்றான். இறைவா! நீயே எனக்கு துணை, என வணங்கிவிட்டு வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு குலபூஷண பாண்டியன், சாமந்தனை அழைத்தான்.
சேனாதிபதி! சேதிராயனை எதிர்க்கும் படை திரட்டுவதற்காக களஞ்சியத்தில் இருந்து பெரும் பொருளை எடுத்துச் சென்றீர்! ஏறத்தாழ ஒரு ஆண்டாக படை திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பீர்! அந்த பெரும்படையின் அணி வகுப்பை நான் காண வேண்டும். இங்கே நடக்கும் அணிவகுப்பு பற்றி அறிந்தவுடனேயே, சேதிராயன் ஒடுங்கி விட வேண்டும். நாளை மாலை நீர் இதுவரை சேர்த்துள்ள படையை என் முன் நிறுத்த வேண்டும். நான் அதைப் பார்வையிட வேண்டும், என உத்தரவிட்டான். சாமந்தனுக்கு தூக்கி வாரி போட்டது. எடுத்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கு செலவிட்டோம். ஒரு நபரைக் கூட வேலைக்கு அமர்த்தவில்லை. இனி, அந்த சுந்தரேஸ்வரப் பெருமான் தான் எனக்குத்துணை! சொக்கநாதா! சோமசுந்தரக் கடவுளே! நீரே எனக்கு அபயமளிக்க வேண்டும். உன் அடியார்களுக்கே பணத்தை செலவிட்டேன். நீ குடியிருக்கும் இல்லங்களைச் சீரமைக்க பெரும் தொகையை  தந்தேன். இப்போது, இக்கட்டில் சிக்கியிருக்கிறேன். என்னைக் காப்பாற்று, என்று கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது. சாமந்தா! கவலை கொள்ளாதே. நாளை மாலை மன்னனை மைதானத்துக்கு வரச்சொல். அங்கே, நாம் படைகளுடன் வருவோம், என அருள்வாக்கு பிறந்தது. சோமசுந்தரப் பெருமானே இவ்வாறு கருணை செய்துவிட்டதால், மகிழ்ச்சியடைந்த சாமந்தன், மறுநாள் மன்னனை வரச்சொல்லி விட்டு, மைதானத்தில் காத்திருந்தான். அணிவகுப்பைக் காண மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறைவனே வாக்குறுதி அளித்துவிட்டதால், சாமந்தன் நம்பிக்கையுடனும், பெருமிதத்துடனும் தனக்கே தெரியாத அந்த படையைக் காண தயாராக மன்னன் அருகில் நின்றான். 
குலபூஷணனும் ஆர்வமாயிருந்தான். சேனாதிபதியே! படைகளை வரச் சொல்லும், என்று ஆணையிட்டான். சாமந்தன் கண்களை மூடி சுந்தரேஸ்வரரை தியானித்தான்.சொக்கநாதப் பெருமானே! தாங்கள் எனக்களித்த வாக்குறுதிப்படி உடனே எழுந்தருளுங்கள், என்றான். அவ்வளவு தான்.... ஹோவென்ற பேரிரைச்சலுடன் மதுரை நகரே குலுங்கும் வண்ணம் படைகள் அணிவகுத்து வந்தன. நடுநாயகமாக, சொக்கநாதர் ஒரு வாலிபனின் வடிவில் வெள்ளைக்குதிரையில் ஏறி கம்பீரமாக தலைமை தாங்கி வந்தார். யானை, குதிரை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளும் வந்தன. ஒன்றல்ல! இரண்டல்ல! சிவபெருமானைச் சூழ்ந்து 78 ஆயிரம் வீரர்கள்... அல்ல.. அல்ல... 78 ஆயிரம் சிவகணங்கள், மானிட வடிவெடுத்து படைவீரர்களைப் போல் சூழ்ந்து வந்தனர். அனைவரும் திருநீறு, ருத்ராட்சம் அணிந்து காட்சி தந்தனர். படைகள் எழுப்பிய புழுதிப்படலத்தில் நகரே மறைந்துவிட்டது. சாமந்தன் அதிசயத்து பரவசத்தில் நின்றான். மன்னன் குலபூஷணன் மகிழ்ச்சியில் திளைத்தான். அங்கம், வங்கம், கலிங்கம், சிங்களம், மாளவம், குலிந்தம், கொங்கணம், தெலுங்கு நாட்டுப் படைகள், சவுட, ஒட்டிய, கொல்ல, கூர்ச்சர நாடர் படைகள், விதேச, கடார, கேகய, மரகத, மராட்டியம், காஞ்சி நாட்டு வீரர்கள் பாரதமெங்கிலும் இருந்து படைகள் வந்து குவிந்தது கண்ட மன்னன், இப்போதே மலைநாட்டு மன்னன் சேதிராயன் தொலைந்தான் என வீரக்குரல் எழுப்பினான். சாமந்தனை பாராட்ட வார்த்தைகளே கிடைக்காமல், அவனை கட்டித் தழுவிக்கொண்டான். படைத்தலைவனாக வந்த ஈசனின் முகப்பொலிவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக வந்த ஈசனை, சாதாரண மனிதனாகக் கருதி பொன்னும், பொருளும் வாரிக்கொடுத்தான். சாமந்தனுக்கும் அவ்வாறே பல பரிசுகளைத் தந்தான். நல்ல நேரம் வந்தால் மொத்தமாக வந்து மனிதனை திக்குமுக்காட வைத்துவிடும். இந்த இனிய நேரத்தில் ஒற்றன் ஒருவன் வந்து மன்னரை அடிபணிந்தான்.
பாண்டிய மாமன்னரே! தங்கள் சமூகத்துக்கு இனிய சேதி ஒன்று கொண்டு வந்துள்ளேன். நமது பகைவன் சேதிராஜன், காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற போது, புலி தாக்கி இறந்துவிட்டான், என்றான்.  மன்னன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன், அந்த ஒற்றனுக்கு முத்துமாலைகள், நவரத்தினங்களைக் காணிக்கையாக்கினான். பின்னர் படை கொண்டு வந்த சோமசுந்தரரை நோக்கி,இப்போது படையெடுப்புக்கு அவசியமில்லாமல் போயிற்று. எதிரி மன்னன் மாண்டுவிட்டான். நீர் படைகளை பாசறைக்கு அழைத்துச் செல்லும். தேவைப் படும் போது இங்கு வரலாம், என்றான். அவ்வளவு தான்! படைத்தலைவரும் அங்கு நின்ற படைகளும் மறைந்து விட்டனர். மன்னன் திகைத்தான். சாமந்தன் தன் தன்மானம் காக்கப்பட்டது குறித்து மகிழ்வுடன் நின்றான். கஜானாவில் எடுத்த பணத்துக்கு சிவசேவை செய்தேனே தவிர படை திரட்டவே இல்லை. சோமசுந்தரரிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன். அவரே வருவதாக அசரீரி ஒலித்தது. அதுபோல் வந்தார். சேதிராஜனின் ஆயுளையும் முடித்தார். படைகளுடன் மறைந்து விட்டார், என்றான்.ஆஹா... சேதிராஜனைக் கொல்வதற்கு சோமசுந்தரரை நம்பாமல், படைகளைத் திரட்ட  சொன்னேனே! என்னே என் அறிவீனம்! அதே நேரம், சாமந்தனின் முயற்சியால் தானே கடவுளே இங்கு வந்து காட்சி தந்தார். மதுரை மக்களெல்லாம் அவரால் தானே இறைவனின் காட்சியைத் தரிசிக்க முடிந்தது, எனச் சொல்லி, தன் களஞ்சியத்திலுள்ள செல்வம் முழுவதையும் சாமந்தனிடமே ஒப்படைத்தான்.சிவசேவைக்கு அந்த பெருஞ் செல்வம் செலவிடப்பட்டது. மதுரையில் வைகை வற்றாமல் ஓடியது. அறநெறி தழைத்த அதே வேகத்தில், நம்மை விட சிவபக்தியில் சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தையும் மன்னன் உள்ளத்தில் வேர் விட்டது. அதனால், வேதம் கற்ற அந்தணர்களைக் கூட மதிக்கத் தவறினான். இதன் விளைவாக பாண்டியநாட்டுக்கு மீண்டும் சோதனை வந்தது.

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...