Skip to main content

நரி பரியானது; பரி நரியானது; இறைவனின் திருவிளையாடல்


வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்


மதுரை அருகிலுள்ள திருவாதவூரைச் சேர்ந்த தனது பக்தருக்கு அருள் செய்ய தன் விளையாடலைத் துவங்கினார் சிவபெருமான். இவ்வூரில் திருவாதவூரார் என்னும் சிவனடியார் வாழ்ந்து வந்தார். இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, இவர் தூங்கினாலும் கூட இவரது இதயத்தின் துடிப்பு சொல்லிக் கொண்டிருக்கும். இவர் இலக்கணம், இலக்கியம், சாஸ்திரங்களைத் தெளிவாகக் கற்றவர். இவரது அறிவாற்றலைக் கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்தான். ஒருசமயம், மன்னன் அமைச்சரையும், தளபதிகளையும் வரவழைத்து, தங்கள் படை பலத்தைப் பெருக்குவது பற்றி உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது, தங்கள் குதிரைப் படையின் பலம் குறைந்து விட்டது பற்றிய பேச்சு வந்தது. அதை சீரமைக்கும் பொறுப்பை தனது தலைமை அமைச்சரான வாதவூராரிடம் அளித்தான். அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொள்ள உத்தரவிட்டான். வாதவூராரும் பெரும் பொருளை எடுத்து தனியாக ஒதுக்கி வைத்து விட்டார். குதிரை வாங்கச் செல்வதற்கு நல்லநாள் பார்த்தார். அந்தநாள் வரும் வரை தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று அன்னையையும், அண்ணலையும் வணங்கி வந்தார். ஒருநாள் அவரது மனதில் மாற்றம் ஏற்பட்டது. குதிரைகளை வாங்கி ஏன் பொருளை வீணடிக்க வேண்டும்? அழியும் உயிரைக் காக்க, அழிவைத் தரும் படைபலத்தை அதிகரிப்பானேன்...!. அவரது சிந்தனை நீண்டது. அவர் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சுந்தரேஸ்வரரை பிரார்த்தித்தார்.
பெருமானே! குதிரை வாங்குவதற்கென பாண்டியன் பெரும் பொருளை அள்ளித் தந்திருக்கிறான். படைபலத்தைப் பெருக்கினால் உலகம் அழியும், சமாதானம் ஒழியும். இந்த கொடிய நிலைக்கு இந்தப் பணம் பயன்படுவானேன்! இதை உன் கோயில் திருப்பணிகளுக்கு செலவிட்டால் நன்றாக இருக்குமே! உன் பக்தர்கள் வயிறார உண்பதற்குப் பயன்படட்டுமே! எனக்கு நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று உருக்கமாக வேண்டினார். இந்த நேரத்தில், அர்ச்சகர் அவருக்கு பூவும், திருநீறும் பிரசாதமாகத் தந்தார். இதை இறைவனின் அனுமதியாகவே கருதிக் கொண்டார் வாதவூரார். உடனடியாக படை, பரிவாரங்களுடன் குதிரை வாங்குவதாக மன்னனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். குதிரை வாங்குவதற்கான பொருள் ஒட்டகங்களில் ஏற்றப்பட்டன. இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு கிளம்பிவிட்டார். திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில், தன் பக்தனின் வருகைக்காக அமர்ந்திருந்தார். இந்த உலகம் தன் காலம் உள்ளளவும் உருகி உருகி பாடப்போகும், தேனினும் இனிய திருவாசகத்தை பாடப்போகிறோம் என்பதை வாதவூரார் அறிவாரா என்ன! அவர் சிவசிந்தனையுடன் தன் குதிரை மேல் வந்து கொண்டிருந்தார். வழியிலுள்ள சிவத் தலங்களையெல்லாம் தரிசித்தார். முல்லை, பாலை நிலங்களைத் தாண்டி அவர் திருப்பெருந்துறையை நெருங்கி விட்டார். அவ்வூரின் எல்லையைத் தொட்டாரோ இல்லையோ... பக்தி வெள்ளம் உணர்ச்சிப் பெருக்கெடுத்து அவரது உள்ளத்தையும் உடைத்துக் கொண்டு பீறிட்டது. அதற்கு மேல் அவரால் பயணத்தைத் தொடர இயலவில்லை.
நாம் இந்த ஊரில் தான் தங்கவேண்டுமென இறைவன் திருவுளம் கொண்டு விட்டான் போலும்! இங்கேயே முகாமிட்டு விட வேண்டியது தான், என முடிவெடுத்து, படையினரையும் அங்கேயே தங்க உத்தரவிட்டார். அமைச்சரின் கட்டளையை ஏற்று, அவர்கள் அங்கே கூடாரங்களை அமைத்தனர். வாதவூரார் கோயிலுக்குள் சென்றார். ஆத்மநாதப் பெருமான் அவரது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால், இங்கு மூலஸ்தானத்தில் லிங்கம் கிடையாது. ஆண்டவன் உருவமின்றி இருக்கிறான் என்பது இங்கு தத்துவம். ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கம் இருக்காது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில், அடையாளம் தெரிவதற்காக ஒரு குவளையை வைத்திருப்பார்கள். அங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழம் போல் காட்சியளித்த வாதவூரார், கோயிலுககுள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார். பின்னர் பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார். அவர் முன் விழுந்து வணங்கினார். பாமாலை பாடினார். அவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்தது. அதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்து கிடந்த வாதவூராரின் சிரசில் வைத்தார். திருவடி தீட்சை என்றும், சிவ தீட்சை என்றும் இதைச் சொல்வார்கள். அவரது திருவடி பட்டதோ இல்லையோ, வாதவூராரின் மெய் சிலிர்த்தது. மளமளவென பாடல்கள் வெளிப்பட்டன. அந்தப் பாமாலைகளை இறைவனுக்கு சூட்டிநெருக்குருகிப் போனார். 
பாடியவர் மட்டுமல்ல! இறைவனே கூட அந்தப் பாடல்களை கேட்டு உருகிப் போனார். அப்பா! நீ செந்தமிழால் என்னைத் தாலாட்டினாய். ஒவ்வொரு வார்த்தையையும் முத்தென்பேன்... இல்லையில்லை... மாணிக்கமென்று தான் சொல்ல வேண்டும். நீ மாணிக்கவாசகனப்பா... மாணிக்கவாசகன், என்றார் பெருமான். அன்றுமுதல் வாதவூரார் மாணிக்கவாசகர் ஆகி விட்டார். இனி, அவரை மாணிக்கவாசகர் என்றே நாம் அழைப்போம். மாணிக்கவாசகருக்கு மீண்டும் ஆசியளித்து விட்டு, குருந்த மரத்தடியில் இருந்த தட்சிணாமூர்த்தி வடிவில் இருந்த சிவன் மறைந்துவிட்டார். சிவன் தனக்கு காட்சி தந்த அந்த ஊரிலேயே தங்கி சிவகைங்கர்யம் செய்ய மாணிக்கவாசகர் முடிவு செய்தார். படையினரை அழைத்தார். குதிரை வாங்குவதற்கான ஏற்பாடுகளை நான் செய்து விட்டேன். குதிரைகளுடன் நான் ஆடிமாதம் மதுரைக்கு வருவதாக மன்னரிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் இப்போது ஊருக்கு கிளம்பலாம், என்றார். படையினரும், அமைச்சரின் கட்டளையை ஏற்று ஊருக்குப் புறப்பட்டனர். பின், தான் கொண்டு வந்த பணத்தைக் கொண்டு கோயிலைத் திருப்பணி செய்தார். கும்பாபிஷேகம் நடத்தினார். கையில் இருந்த செல்வமும் வேகமாகக் கரைந்தது. இதனிடையே ஆடி பிறந்துவிட்டது. குதிரை வாங்க வந்த ஞாபகமே மாணிக்கவாசகருக்கு மறந்து போனது. அவர் எப்போதும் சிவாயநம..சிவாயநம என உச்சரித்தபடியே இருந்தார். பாண்டியமன்னன், தன் அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். திருப்பெருந்துறையில் அவர் தங்கியிருக்கிறார் என்பதை ஏற்கனவே வந்த படைவீரர்கள் மூலம் தெரிந்திருந்த அவன், அவருக்கு ஒரு வீரன் மூலமாக ஓலை அனுப்பினான். 
ஓலையைப் படித்த பிறகு தான், அவருக்கு பழைய நினைவே திரும்பியது. நேராக ஆத்மநாதர் சன்னதிக்கு ஓடினார். ஐயனே! மன்னன் என்னை நம்பி, மக்கள் பணத்தில் குதிரை வாங்க அனுப்பினான். நானோ, உன் திருப்பணிக்கென செல்வம் அனைத்தையும் செலவிட்டேன். இப்போது, குதிரைகளை அங்கு கொண்டு சென்றாக வேண்டுமே! எனக்கு வழிகாட்டு, எம்பெருமானே! என்று இறைஞ்சினார். அப்போது அசரீரி ஒலித்தது. கவலைப்படாதே மாணிக்கவாசகா! விரைவில் குதிரைகளுடன் வருவதாக பதில் ஓலை அனுப்பு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது அக்குரல். இறைவனின் குரல் கேட்ட மாணிக்கவாசகர், அவர் சொன்னபடியே மதுரைக்கு குதிரைகளுடன் வருவதாகப் பதில் ஓலை அனுப்பினார். அரிமர்த்தன பாண்டியனும் ஓலையைப் படித்து மகிழ்ந்தான். மன்னன் குறிப்பிட்டிருந்த காலம் நெருங்கியது. குதிரைகள் எப்படி வரும் என்ற கவலையில் இருந்த மாணிக்கவாசகரின் கனவில், தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன், மாணிக்கவாசகா! நீ உடனே கிளம்பு. நான் குதிரைகளுடன் வருகிறேன், என்றார். தனது மானத்தைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் வேண்டிய மாணிக்கவாசகர் பாண்டியநாட்டுக்கு கிளம்பினார். அரண்மனைக்குச் சென்ற மாணிக்கவாசகரிடம், அமைச்சரே! குதிரைகள் எங்கே? எத்தனை குதிரை வாங்கினீர்கள்? என்று கேட்ட மன்னனிடம்,அரசே! தாங்கள் இதுவரை பார்த்திராத குதிரை வகைகள் வரிசையாக வந்து சேரும், என்று பதிலளித்தார் மாணிக்கவாசகர்.

நரியை பரியாக்கிய படலம்!


குதிரைகள் நீண்டநாட்களாக வரவில்லை. மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாணிக்கவாசகரை அழைத்து விசாரித்தான். அவர் மூன்று நாள் தவணை கேட்டார். அதுவும் முடிந்தது. இதன்பிறகு, பொறுமையிழந்த மன்னன், வாதவூரானின் முகத்தில் நான் விழிக்க விரும்பவில்லை. ஏமாற்றுக்காரனுடன் என்ன பேச்சு! அரசுப்பணத்தைக் கையாடிய அவனை மந்திரி பதவியில் இருந்து நீக்குகிறேன். அவனைச் சிறையில் அடையுங்கள், சித்ரவதை செய்யுங்கள், என ஆணையிட்டான். மாணிக்கவாசகரின் இல்லத்துக்கு காவலர்கள் சென்றனர். அவர் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். காவலர்கள் அரசன் இட்ட ஆணையைச் சொல்லவே, அவர் ஏதும் சொல்லவில்லை. நடப்பதெல்லாம் அவன் திருவிளையாடல் என அமைதியாக இருந்தார். காவலர்கள் அவர் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அதே நிலையில் சிறைக்குள் தள்ளினர். அந்தப் பாரத்தைக் கூட சிவனுக்காக சுமப்பதாக கருதினார் மாணிக்கவாசகர். பாறாங்கற்கள் பஞ்சுபோல் இருந்தது. மறுநாள் காவலர்கள் வந்தனர். அந்தக் கற்களைச் சுமந்ததால் சோர்ந்து மயங்கியிருப்பார் என நினைத்து வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வழக்கத்தை விட உற்சாகமாக இருந்தார். அவரை இரும்புக்கருவி ஒன்றைக் கொண்டு தாக்கினர். கண்டபடி திட்டினர்.
 அரசுப் பணத்தைக் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ளாவிட்டால் மறுநாள் தண்டனை அதிகரிக்கும் என்று எச்சரித்து சென்றனர். இதற்குள் மன்னன் விதித்த கெடு காலமான ஆடி முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. அம்மாதத்தில் வரும் மூலம் நட்சத்திர நாளன்று சிவபெருமான் நந்தீஸ்வரரை அழைத்தார். நந்தி! என் பக்தன் மாணிக்கவாசகன், குதிரை வாங்கித்தராத குற்றத்திற்காக பாண்டியநாட்டு சிறையில் அவதிப்படுகிறான். நீயும், நம் பூதகணத்தவர்களும் காட்டிலுள்ள நரிகளை குதிரைகளாக்கி அங்கு கொண்டு செல்லுங்கள். நான் குதிரை வீரனாக உங்களுடன் வருவேன், என்றார். நந்தீஸ்வரரும் மகிழ்ச்சியுடன் அவ்வாறே செய்தார். ஆயிரக்கணக்கான குதிரைகள் மதுரை நகருக்குள் அணிவகுத்து வந்தன. குதிரைகள் பற்றி மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் பதறிப்போய் ஓடி வந்தான். மாணிக்கவாசகரை விடுவிக்க உத்தரவிட்டான். குதிரைகளைக் காண ஆவலுடன் மணிமண்டபத்தில் வந்தமர்ந்தான். இதற்குள் சிவபெருமான் தன் லீலையைத் தொடங்கி விட்டார். குதிரைகள் மக்கள் கண்களுக்கு தெரிந்தது. மன்னனின் கண்களுக்கு தெரியவில்லை. வாதவூரானே! என்ன விளையாடுகிறீரா! மற்றவர்களெல்லாம் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள், என் கண்களுக்கு தெரியவில்லையே, என்றான். மீண்டும் சிறைக்கு அவரை அனுப்பினான். சற்றுநேரத்தில், அரண்மனை  கொட்டிலுக்குள் ஆயிரக்கணக்கான குதிரைகளும், வீரர்களும் நிற்பதைக் கண்ட காவலர்கள் மன்னனிடம் சொல்ல, இதென்ன புதுக்குழப்பம்? என்று அங்கு ஓடினான். இப்போது, குதிரைகள் கண்ணுக்குத் தெரிந்தன.
இப்படியும் அழகான குதிரைகளா! பாண்டியநாட்டு குதிரைப்படை போல், இனி எங்கும் குதிரைகளைக் காண முடியாது! அதோ! இந்த குதிரை படைக்கு தலைமை வகித்து வந்துள்ளானே ...ஒரு வீரன் (சிவன் அந்தக்குதிரையில் அமர்ந்திருந்தார்) அதைப் போல் சாமுத்ரிகா லட்சணம் கொண்ட குதிரை இனி பிறக்கவும் செய்யாது. பிற நாடுகளுக்கு கிடைக்கவும் செய்யாது! என பெருமையடித்தான்.  மாணிக்கவாசகரை விடுதலை செய்து மீண்டும் மன்னிப்பு கேட்டு, அவரது அருமை தெரியாமல் இருந்தது பற்றி தன் வருத்தத்தை தெரிவித்தான். குதிரைகள் மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டதும், தலைமை வீரனாக வந்த சிவனும், அவருடன் வந்த பூதகணவீரர்களும் கிளம்பிவிட்டனர். சற்றுதூரம் சென்றதும் அவர்கள் மறைந்து விட்டனர். மாணிக்கவாசகருக்கு மன்னன் அளித்த பரிசுக்கு அளவேயில்லை. அதைப் பெற்றுக்கொண்டு அவர் வீடு திரும்பிய போது, உறவினர்கள் எல்லாரும் அங்கு குவிந்திருந்தார்கள். அவர்களுக் கெல்லாம் தான் கொண்டுவந்ததில் பெரும்பகுதியை அள்ளி வழங்கினார் மாணிக்கவாசகர். பின்னர், பூஜையறைக்குச் சென்று சிவதியானத்தில் மூழ்கிவிட்டார். இரவாகி விட்டது. மக்கள் உறங்கும் வேளை... ஊ...ஊ... என எங்கும் ஒலி கேட்டது. காட்டுக்குள் அல்லவா நரிகள் ஊளையிடும்! நாட்டுக்குள் நரி சத்தம் கேட்கிறதே! மக்களுக்கு மட்டுமல்ல.... அரிமர்த்தன பாண்டியனுக்கும் அந்த ஒலி கேட்டது. மக்கள் சப்தம் வந்த திசை நோக்கி ஓடிவந்தனர்.




பரியை நரியாக்கி வையை அழைத்த படலம்!


குதிரைகள் கட்டப்பட்டிருந்த இடத்தில் அத்தனையும் நரிகளாக இருந்தன. பாண்டியன் கொதித்தான். இந்த அரிமர்த்தனனையே முட்டாளக்குகிறானா அந்த திருவாதவூரான்! பிடியுங்கள் அவனை! முதலில் அழகிய குதிரைகளைக் காட்டினான். இப்போது, நரிகளாக்கி விட்டான். மாயவித்தைக்காரனாக மாறிவிட்டானே! பணத்துக்காக இப்படி நாடகமாடுகிறான்,  என்று வசைமாரி பொழிந்தவன், பிடித்து வாருங்கள், அவனை மீண்டும், என்று கட்டளையிட்டான். காவலர்கள் சென்றனர். அவர் தியானம் செய்த அறைக்குச் சென்று கூச்சலிட்டு, பரிகளை நரிகளாகக்கி விட்டு, நீர் தியானத்தில் உள்ளீரா! வாரும் எங்களுடன், என இழுத்துச்சென்றனர். மன்னன் அவரைக் கடுமையாகப் பேசினான். பணத்தாசை பிடித்தவனே! உன்னைப் பார்க்கவே எனக்கு கண்கள் கூசுகின்றன. உன்னை ஆரம்பத்திலேயே கொல்லாமல் விட்டேனே! அதுதான் நான் செய்த குற்றம். இருப்பினும், அரசுப் பணத்தை உம்மிடமிருந்து கைப்பற்றியாக வேண்டும். அது மக்கள் பணம். அதைக் கொடுத்து விட்டு மறுவேலை பாரும், என்றவன் யாரங்கே? என்று கைதட்டி காவலர்களை அழைத்து, இவனிடமிருந்து பணத்தைக் கைப்பற்றும் வரை வைகையில் சுடுமணலில் படுக்க வையுங்கள், என்று கட்டளையிட்டான். 
காவலர்கள் அவரது காலிலும் கையிலும் பெரிய பாறாங்கற்களை தூக்கி வைத்துக் கட்டி மணலில் படுக்க வைத்தனர். மாணிக்கவாசகருக்கு கால் சூடுபொறுக்க முடியவில்லை. ஆ ஆ..வென அலறினார். மீனாட்சியம்மன் கோபுரம் தூரத்தில் தெரிந்தது. இறைவா! இதென்ன சோதனை! குதிரைகளை நரிகளாக்கிய மர்மம் என்ன? இத்தகைய கொடுமைக்கு ஏன் என்னை ஆளாக்கினாய்? என்று கண்ணீர் விட்டார். இந்த அபயக்குரல், கோயிலுக்குள் இருந்த சுந்தரேஸ்வரப் பெருமானை உருக்கியது. ஆனாலும், அந்த ஈசன் நல்லவர்களுக்கு சோதனைகளைத் தந்த பிறகு தான் இரங்குவான் போலும்! சுடுமணல் நிறைந்து கிடந்த அந்த ஆற்றில் மழையே பெய்யாமல் திடீரென வெள்ளம் பெருகி வந்தது. காவலர்கள் அடித்து பிடித்துக் கொண்டு கரைக்கு ஓடினர். ஆனால், மாணிக்கவாசகரைக் கட்டியிருந்த கற்கள் உடைந்தன. அவர் எழுந்தார். அவர் நின்ற பகுதியில் மட்டும் வெள்ளம் அவரது பாதங்களை நனைத்துக்கொண்டு மூழ்கடிக்காமல் ஓடியது. சற்றுநேரத்தில் வெள்ளத்தின் அளவு மேலும் அதிகரித்து கரை உடைத்தது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. எம்பெருமானைப் புகழ்ந்து பாடியபடி குளிர்ந்த நீரில் நடப்பது நடக்கட்டுமென நின்றார்.

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...