Skip to main content

பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்










பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் இறைவனான சொக்கநாதர் உணவின்றி வருந்திய பன்றிக் குட்டிகளுக்கு தாய்ப்பன்றியாக வந்து பாலூட்டியதைக் குறிப்பிடுகிறது.
சுகலனின் புதல்வர்கள் பெற்ற சாபம், சாபம் பெற்றவர்கள் பன்றிக்குட்டிகளாக மாறுதல், பன்றிக்குட்டிகள் உணவின்றி வருந்துதல், சொக்கநாதர் பன்றிக்குட்டிகளின் சாபத்தை நீக்கியது ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.
பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் நாற்பத்தி ஐந்தாவது படலமாக அமைந்துள்ளது.

சாபத்தினால் பன்றிக்குட்டிகள் உருவாதல்

ராசராச பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் மதுரை நகரில் வைகை ஆற்றின் கரைக்குத் தெற்கே குருவிருந்த துறை என்ற ஊர் ஒன்று இருந்தது.
தற்போது அவ்வூர் குருவித்துறை என்றழைக்கப்படுகிறது. அவ்வூரில் சுகலன் என்ற ஒரு வேளாளன் வசித்து வந்தான். அவனுடைய மனைவி சுகலை ஆவாள்.
அவர்கள் பொருட்செல்வமும், மக்கள் செல்வமும் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அதாவது அத்தம்பதியினருக்கு பன்னிரெண்டு ஆண்மக்கள் இருந்தனர்.
சில ஆண்டுகளில் சுகலன் இறந்து விட்டான். தந்தையை இழந்த சுகலனின் ஆண்மக்கள் உணவிற்காக வேடர்களோடு இணைந்து காட்டிற்கு சென்று வேட்டையாடி வந்தனர்.
அப்போது ஒருசமயம் காட்டில் தவம் செய்து கொண்டிருந்த தேவர்களின் குருவான வியாழ பகவானைக் கண்டனர்.
அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த வியாழ பகவானை கேலி செய்தனர். பின்னர் அவர் மேல் கல்லையும், மண்ணையும் வாரி இறைத்தனர்.
இதனால் கோபம் கொண்ட தேவகுரு அவர்களை பன்றிக்குட்டிகளாகப் பிறந்து தாய்தந்தையரை இழந்து உணவுக்காக அலைவீர்கள்” என்று சாபம் இட்டார்.
தேவகுருவின் சாபத்தால் அதிர்ச்சியடைந்த சுகலனின் பிள்ளைகள் “எங்கள் சாபம் நீங்க வழி கூறுங்கள்” என்று கதறினர்.
அவர்களிடம் இரக்கம் கொண்ட தேவகுரு “மதுரைச் சொக்கநாதர் உங்களுக்கு தாயாய் வந்து பாலூட்டி உங்களின் பசித்துன்பத்தைப் போக்குவார்.
பின்னர் அவர் பாண்டியனுக்கு உங்களை மந்திரியாக்கி இறுதியில் உங்களுக்கு முக்தியையும் கொடுப்பார்” என்று கூறினார்.
சுகலனின் பிள்ளைகள் அக்காட்டில் இருந்த அரசபன்றிக்கு மகன்களாக அரசிபன்றியின் வயிற்றில் தோன்றினர்.

சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டல்

அச்சமயம் ராசராச பாண்டியன் காட்டிற்கு பெரும் படையுடன் வந்து தொல்லை தந்த விலங்குகளை வேட்டையாட எண்ணினான்.
அதன்படி காட்டிற்கு சிறந்த வேட்டையாடுபவர்களுடன் வந்தான். இராசராச பாண்டியனின் வருகையை அரசபன்றி ஒற்றர் பன்றி மூலம் அறிந்தது.
பின்னர் அரசிபன்றியிடம் “நீ இங்கேயே பத்திரமாக நம் குழந்தைகளை கவனித்துக் கொண்டிரு. நான் பாண்டியனை எதிர்த்து போராடச் செல்கிறேன். 
நான் உயிருடன் திரும்பி வருவேனா? இல்லை மடிவேனா? என்று தெரியவில்லை” என்றது.
அதனைக் கேட்ட அரசிபன்றி “நானும் உங்களுடன் வந்து பாண்டியனை எதிர்ப்பேன். வெற்றி பெற்றால் நாம் மீள்வோம். இல்லையேல் நாம் அங்கேயே மடிவோம்” என்று கூறியது.
பன்றிகள் பாண்டியனை எதிர்த்து போரிடப் புறப்பட்டன. இதனால் பன்றிக்குட்டிகள் தனிமை அடைந்தன.
அரசபன்றி இராசராச பாண்டியனை எதிர்த்து போரிட்டு மடிந்தது. அரசிபன்றி சருச்சான் என்பவனுடன் போரிட்டு மடிந்தது.
பன்றிகள் மடிந்த இடம் இன்றும் பன்றிமலை என்று அழைக்கப்படுகிறது. அம்மலையில் சித்தர் மற்றும் யோகிகள் வீடுபேற்றிற்காக தவம் செய்வதாக கருதப்படுகிறது.
ரங்க வித்யாதாரன் என்னும் இயக்கன் புலத்தியரின் தவத்திற்கு இடையூராக யாழிசைத்து பாடினான். இதனால் புலத்தியர் கோபத்தில் பன்றியாகப் போகும்படி சபித்தார்.
வருந்திய அவ்வியக்கனுக்கு இராசராச பாண்டியனுடனான போரின் போது மடிந்து மீண்டும் பழைய நிலையை அடைவாய் என்று புலத்தியர் சாபம் நிவர்த்தி கூறினார்.
அச்சாபத்தினால் ரங்க வித்யாதரன் அரசபன்றியாய் பிறந்தான். இராசராச பாண்டியனால் கொல்லப்பட்டு பழைய வடிவம் அடைந்தான்.
சாபத்தினால் பன்றிஉருவம் பெற்ற இயக்கனின் உடல் இருந்த இடம் ஆதலால் பன்றி மலை தவம் மேற்கொள்ள சிறந்த இடம் ஆகும்.
பன்றிக்குட்டிகள் தாயையும், தந்தையையும் இழந்து உணவிற்காக அலைந்து திரிந்தன.
பன்றிக்குட்டிகளிடம் இரக்கம் கொண்ட சொக்கநாதர் தாய் பன்றியாக உருமாறி பன்றிக்குட்டிகளின் முன் தோன்றினார். தம் தாயைக் கண்ட பன்றிக்குட்டிகள் ஆவலாய் தாயிடம் சென்றன.
சொக்கநாதர் பன்றிக்குட்டிகளுக்கு பாலூட்டினார். சொக்கநாதரின் பாலை உண்ட பன்றிக்குட்டிகள் வலிமையையும், வெற்றியையும், ஞானத்தையும், நற்குணங்களையும் பெற்றன.
பின்னர் இறைவனார் அக்குட்டிகளுக்கு முகத்தை மட்டும் பன்றியாக வைத்து உடலினை மனித வடிவமாக மாற்றினார்.
பின்னர் சொக்கநாதர் அங்கிருந்து மறைந்து அருளினார். இவ்வாறு எவ்வுயிருக்கும் தாயும் தந்தையுமாக இருந்து காப்பவ‌ர் இறைவனே அன்றி ஒருவரும் இல்லை.

இப்படலம் கூறும் கருத்து

பொரியோர்களை கேலி செய்தால் சுகலனின் பிள்ளைகளுக்கு உண்டான இழிவான நிலையே ஏற்படும்.
இழிந்த நிலை உயிரினங்களையும் இறைவன் காப்பார் ஆகியவை இப்படலம் கூறும் கருத்தாகும்.


Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...