Skip to main content

சிவபுராணம் வரிகள் 50 - 55 விளக்கம்



ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம் . *சிவபுராண விளக்கம்*
வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

வல்வினையேன் - எண்ணற்ற வினைகளை உடையவன்,  தன்னை - இறைவன்,
மறைந்திட - ஒளிந்திருக்க, மூடிய - காரணமான, மாய இருள் -  மாயப்பிறப்பு
அறம் - செயல், பாவம் - எண்ணங்கள்,  என்னும் - சகலரும், அரும் - கடுமையான, கடினமான, 
கயிறு - நங்கூர கம்பி வடம், கட்டி - பிணைத்து, புறம்தோல் - வெளியே தெரியாவண்ணம், வெளியே தோல் கொண்டு ,  போர்த்து - மறைத்து அடக்கிக்கொள்ளுதல், புழு - கிருமி, 
அழுக்கு - மாசு , மலம் - ஆணவம், போன்ற மும்மலம், சோர் - வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுதல், குடில் - குடிசை, வீடு (இங்கு நம் உயிர் ஆன்மா குடி கொண்டிருக்கும் உடலை குறிக்கிறது),  மலங்கப் - குழப்பம், புலன் ஐந்தும் - நம் ஐந்து புலன்கள், வஞ்சனை- ஏமாற்றுதல்
,
எண்ணற்ற வினைகளை உடையவர்களான நம் உள்ளே, இறைவன் ஒளிந்திருக்க காரணமான மாயப்பிறப்பு, சகலரையும் அதாவது அனைவரையும், எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற கடினமான நங்கூர கம்பி வடம் கொண்டு பிணைத்திருக்கிறது என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். நங்கூர கம்பி வடம் என்பது  மிகப் பொருத்தமான வார்த்தை. ஏனெனில் பிறவி என்னும் பெருங்கடலை கடக்க விடாமல், நம்முடைய செயல்களும் எண்ணங்களும் நங்கூர கம்பி வடம் போன்று பிணைந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் பிறவி என்னும் பெருங்கடலை கடந்து,  நமக்காக காத்திருக்கும் இறைவனை அடைய முடியும். “சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றிஎன்கிற வரியில் இந்தக் கருத்தையே மறைமுகமாக மாணிக்கவாசகர் வலியுறுத்தியிருந்தார். சீர் - நற்பேறு, ஆர் - அரிய , பூரணமான, பெருந்துறை - கப்பல் நிறுத்துமிடம், இறங்குமிடம்.  கடலில் செல்லும் கப்பல்கள் அடையவேண்டிய இடத்தை  அடைந்தவுடன், கப்பல் நிறுத்த துறைமுகம் தேவைப்படுவது போல, ஆன்மாக்கள் நற்பேறு கிடைத்து, பூரணத்துவம் அடைந்து தன்னை வந்து சேரும் இடமாக துறைமுகமாக, நம்மைப் பாதுகாக்கும் தேவனாக இறைவன் இருக்கிறான் என்று ஏற்கனவே பார்த்தோம். இறைவன் அன்பாய் பொறுமையாய், கருணை உள்ளவனாய், தன் குழந்தைகளான ஆன்மாக்கள் எப்பொழுது தன்னை வந்து சேரும் என்று ஆவலுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள தாயாய், தந்தையாய் காத்திருக்கிறான். அத்தகைய அன்பு மிக்கவன், நம்முடைய சிவன். சிவனுடைய அந்த அன்பை உணரும் பொழுது, வேண்டுதல் அனைத்தும் மறைந்து, அன்பு இவ்வளவு ஆனந்தம் தருமா ?இவ்வளவு அமைதி தருமா? என்கிற நிலை ஆன்மாக்களுக்கு ஏற்படும்.

 ஒன்பது வாசல்களை (செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று) கொண்ட நமது உடல்,  தோல் மற்றும், அழுக்கு , கிருமிகள் இவற்றால் மட்டும் மூடி இல்லாமல், நான் என்கிற ஆணவம், வஞ்சனை, தந்திரம், ஏமாற்றுதல் போன்ற மாயை இருளாலும்  மூடியிருக்கிறது. நமது புலன்கள் ஐந்தும் குழம்பி, நம்மை ஏமாற்றுகிறது என மணிக்கவாசகர் இங்கே குறிப்பிடுகிறார். நம்மை நாம், அகமென்றும், புறமென்றும் பிரித்துக்கொள்ள வேண்டும். நாம் பெரும்பாலும் புறத்தின் வழியே, அதாவது புலன்களின் வழியே மட்டும் செல்வதால் தான், நம்மால், நம்முள் இருக்கும் இறைவனை உணர முடிவதில்லை.  மனிதர்களாகிய நமக்கு குடும்பம், கடமைகள் போன்றவைகள் இருக்கின்றன. அவைகளை சரிவர செய்வதற்கு, கண்டிப்பாக நாம் புலன்களை உபயோகப்படுத்த வேண்டும். குடும்பம் மற்றும் அலுவலகம் போன்றவற்றில் நம் பணிகளை ஒழுங்காக செய்ய அல்லது நாம் மற்றவர்களை தலைமை ஏற்று நடத்திச் செல்ல, கண்டிப்பு, கோபம் போன்றவற்றை சரியான அளவில் உபயோகப்படுத்தலாம். ஆனால் அந்த கோபம் அகத்திலிருந்து வருதல் கூடாது. சினிமாவில் நடிப்பவர்கள், அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்ப, அந்த நேரத்தில் மட்டும் உணர்ச்சிவசப்பட்டு, கோபப்பட்டு என்று பல்வேறு வேடங்களை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப அந்த நிமிடம் நடித்துவிட்டு, பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள். அதுபோல் நாமும், நம் வாழ்வில், அந்தந்த இடங்களுக்கு ஏற்றாற்போல், பாத்திரங்களை செய்துவிட்டு பிறகு இயல்பாக விட வேண்டும். கோபத்தையும், வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் உள்வாங்குதல் கூடாது. நம் அகத்தில் ஆன்மாவாய் இறைவன் குடியிருக்கிறான். எனவே, அங்கு தேவையில்லாத கோபங்கள், எண்ணங்கள், பொறாமை, பழிதீர்க்கும் எண்ணம் போன்றவைகளை வைத்தல் கூடாது. கண்டிப்பாக அந்த குப்பைகளை மனதில் சேர்த்து வைத்தல் கூடாது.  ஆன்மீகத்தில்,  அடிக்கடிமௌனமாய் இருஎன்று கேள்விப்பட்டிருப்போம். மௌனம் என்பது நம் அகத்துக்காக சொல்லப்பட்டது. அதாவது தேவையற்ற எண்ணங்கள்,  நம் மனதில் தோன்றும் பொழுது பலவற்றை நினைத்து, உள்ளுக்குள் மறுகுவோம், உள்ளுக்குள் மனது வெம்பி தவிக்கும், பலவாறு புலம்பும். அப்படி இல்லை எனில் பழைய நினைவுகளை நல்லது, கெட்டது இரண்டுவிதமான நினைவுகளையும் அசை போடுவோம். அது தான் மனதின் இயல்பு. இதைத்தான் மாணிக்கவாசகர், “அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிஎன்று சொல்கிறார். மனதின் எண்ணங்களை அமைதிப்படுத்தி, தேவையற்ற எண்ணங்கள் எழும் பொழுது அதை உணர்ந்து, அந்த நேரத்தில் பாராயணம் மற்றும் நாம ஜபம் செய்ய வேண்டும். இதுதான் மௌனமாக இருப்பதற்கு அர்த்தம். அகத்திற்குள் இந்த மௌனம் வரும் பொழுது, நமக்கு இறைவனிடம் வேண்டுவது கூட நின்றுவிடும். ஏனெனில் நாம் இறைவனை உணரும் பொழுது, அவன் நம்மை அன்புடன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான், வழி நடத்திக் கொண்டிருக்கிறான் என்கிற அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை ஏற்படும். உள்ளுக்குள் இறைவனை உணர்ந்த பிறகு, அவன் அங்கே இருக்கிறான் என்பதால் அவனுடைய நாமம் அல்லது மந்திர ஜெபம், மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதுதான் நம்மையும் அவனையும் பிணைக்கும் அன்பாக மாறும்.   கீழே உள்ள கந்தகுரு கவச வரிகள், மேலே சொல்லியிருக்கும் விஷயத்தை, மிக அற்புதமாக அழகாக சொல்லி இருக்கிறது.கந்தகுரு கவசத்தில் ஒவ்வொரு வரிகளையும் ஊன்றி கவனித்தால், பலவிதமான விஷயங்கள் மிக அழகாக மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.
பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175
ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா

இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195
வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200


“சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான், அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே, அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்” இவைகள் மிக சத்தியமான வரிகள். குரு வேண்டும் என்று நினைப்பவர்கள் கந்த குரு கவசத்தை குரு வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் ஜெபித்து வாருங்கள் கண்டிப்பாக நம்முடைய வாழ்வில் குரு கிடைப்பார்.
இறைவனை உணர நமக்கு தியானம் தேவையில்லை . நாம் செய்யும் பாராயணம் மற்றும் நாமஜபம் நமக்கு இறைவனை உணர்த்தும். திரு பாலகுமாரன் அவர்கள் சேஷாத்ரி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியதங்கக்கைஎன்கிற புத்தகத்தையும், அக்கல்கோட் மகராஜ் அவர்களின் சரித்திரத்தையும் படித்துப்பாருங்கள். மந்திர ஜபம் குறித்து, அவ்வாறு செய்வதினால் கண்டிப்பாக இறைவனை பார்க்க முடியும் என்பது குறித்து, இந்த இரண்டு புத்தகத்திலும் மிக அழகாக கொடுக்கப்பட்டுள்ளது. திருவாசகம், கந்தகுருகவசம், மகான்களின் சரித்திரங்கள் ஆகிய அனைத்தும் இறைவனை உணர்வதற்கு மிக எளிய முறையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதுதான் நாம ஜெபம், மற்றும் பாராயணம். இன்றைக்கு நம்மைத் தாக்கும் வைரஸ் ஒரு துன்பமாக இருந்தாலும் இந்த வைரஸினால்தான், நாம் இன்று பாராயணம் செய்கிறோம், இவ்வாறு செய்யும் பாராயணம் இறைவனை உணர்வதற்கு உரிய மிக எளிய வழி. சிவபுராணம் பாராயணம் செய்யும் அடியவர்கள், திருவாசகம் பாராயணம் செய்யும் அடியவர்கள் பலர்,  தங்களுக்கு இந்தப் பாராயணம் மிக உதவியாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதை பாராயணம் செய்யும் அனைத்து அடியவர்களும் ஏதோ ஒரு விதத்தில் உணர்ந்திருப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கருணை காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கும் அந்த அன்புடைய இறைவன் பாதங்களை போற்றி வணங்குவோம்! இறைவனை உணர்வோம்!
ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...