Skip to main content

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் வரிக்கு விளக்கம்


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
வேகம் என்பது இங்கு மனதின் வேகத்தை குறிக்கும். மனம் காற்றை விட வேகமானது. மனதிற்கு மட்டுமே காலத்தை தாண்டி, முன்னோக்கியும், பின்னோக்கியும் பயணம் செய்யும் ஆற்றல் உண்டு. ஒரு நொடியில் மலரும் நினைவுகள் என்று நம்முடைய சிறு வயது நினைவுகளில் மூழ்கி விடும் நேரங்கள் உண்டு. எதிர்காலத்தில் இப்படி எல்லாம் செய்ய வேண்டும், அப்படி எல்லாம் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மூழ்கி விடுபவர்களும் உண்டு . இதைத்தான் பகற்கனவு என்றும் சொல்வார்கள். இருந்த இடத்திலிருந்தே எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய ஒரு கற்பனை திறன் நம் மனதிற்கு  உண்டு. மாட்டிற்கு மூக்கணாங்கயிறு உண்டு, குதிரைக்கு கடிவாளம் உண்டு , வாகனங்களுக்கு பிரேக் இருக்கிறது ஆனால் நமது மனதிற்கு மட்டும்தான் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் தறிகெட்டு ஓடும் வேகம் இருக்கிறது.  இந்த மனதின் வேகத்தை குறைத்து , அமைதியாக்கி, என்னை ஆட்கொண்ட வேந்தன் என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். வேந்தன் என்றால் எல்லா ஆற்றலும் பெற்ற அரசன் என்று பொருள். வேந்தன் என்று சொல்வதன் மூலமாக இறைவன் மட்டுமே நம் மனதை அமைதியாக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறான் என்று குறிப்பாக நமக்கு உணர்த்துகிறார். நம்முடைய படிப்பு, வேலை போன்றவைகள் நமக்கு வாழ்க்கை வசதிகளை கொடுக்கலாம், ஆனால் அவைகள் நமக்கு அமைதியை கொடுக்கமுடியாது. அமைதி வேண்டுமென்றால்,  இறைவனை நாடினால் மட்டுமே கிடைக்கும் என்பதை மாணிக்கவாசகர் நமக்கு அறிவுறுத்துகிறார்.  மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம், தலையமைச்சராக பணியாற்றியவர். எனவே அவருக்கு ஆள்பலம், பணபலம், வசதி அதிகாரம் இவற்றில் எதிலும் குறைவு என்பது இல்லை. ஆனால் மன அமைதி என்பது அவருக்கு சிவன் அவரை ஆட்கொண்ட பிறகுதான் கிடைத்தது என்பதை வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்கிற வரிகள் மூலம் மிக அழுத்தமாக சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.  பெரும்பாலும் நமக்கு மன அமைதி இல்லாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் பந்தயத்தில் ஓடும் குதிரை போல, மற்றவர்களைப் போல வாழ்க்கை வசதிகளை பெற வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
இந்த வரியை இன்றைய வாழ்க்கை முறை கோணத்தில் பார்த்தோமென்றால், எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது தான் மனதின் இயல்பு, அதை நம்மால் மாற்ற இயலாது. எடுத்துக்காட்டாக இன்றைய குழந்தைகள் போனில் அதிகமாக விளையாடுகிறார்கள். அவ்வாறு செய்யாதே என்று நம் குழந்தைகளிடம் சொல்லும் பொழுது, வேறு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி, அவர்கள் அந்த விஷயங்களை ஆர்வமுடன் செய்வதற்கு, நாம் உதவியாக இருந்தால் அவர்கள் போனில் விளையாடுவது கண்டிப்பாக குறையும், மனமும் அது போல தான். இப்படி நினைக்கக் கூடாது, நினைக்கக்கூடாது என்று போட்டு மனதை கஷ்டப்படுத்துவதை  விட, தேவையில்லாத எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது, இது தேவையற்ற எண்ணம் என்பதை உணர்ந்து, இந்த சமயத்தில் நான் நாம ஜபம் செய்கிறேன், பாராயணம் செய்கிறேன் அல்லது எனக்கு பிடித்த ஒரு பாடல் கேட்கிறேன் என்று கேட்கும் பொழுது தேவையில்லாதவற்றை மனதில் நினைப்பது குறைந்துவிடும். நாம் செய்யும் பாராயணங்கள்  மற்றும் நாம ஜெபம் நம்முடைய தேவையற்ற எண்ணங்களை குறைக்கிறது. தேவையற்ற எண்ணங்கள் குறையக் குறைய நமக்கு வாழ்வில் ஒரு தெளிவு கிடைக்கும். எவ்வளவு பிரச்சனை வரும்பொழுதும் அதற்குரிய வழிமுறையும் எளிதாக உணரக்கூடிய ஒரு பக்குவமும் நமக்கு கிடைக்கும்.  வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்கிற வரியின் பொருள் படி நம்முடைய மனதின் வேகத்தை ( தேவையில்லாத எண்ணங்களை) குறைப்பதற்கு நமக்கு இறைவன் பாராயணம் மற்றும் நாம ஜபத்தை நம்முடைய வாழ்வில் கொடுத்துள்ளார்.  நம்முடைய மனம் ஆகாயத் தத்துவத்தை குறிப்பதாக அமைகிறது, ஏனென்றால் நம்முடைய மனதில்,  எண்ணங்கள் குறையக் குறைய, நம்முடைய மனம் சிதம்பரத்தில் சொல்லப்படுகிற வெட்டவெளி போல் ஆகி அங்கு இறைவன் நிறைந்திருக்கும் இடமாக மாறுகிறது. இதுதான் சிதம்பர ரகசியம். நாம் செய்யும் பாராயணங்கள் மூலம் நம் மனதின் வேகத்தை குறைத்து , அமைதியாக்கி, நம்மை ஆட்கொண்ட வேந்தன் சிவனை உணர்ந்து, மாணிக்கவாசகர் பாடிய, வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க என்பதை பொருள் உணர்ந்து பாராயணம் செய்வோம், நம் வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி பணிந்து போற்றிப் பாராயணம் செய்வோம். 

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும்  அமையும். ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

கீர்த்தி திருஅகவல் விளக்கம் - 5 (வரிகள் 71- 86)

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேவூர்   - தேவூர் என்னும் திருத்தலம் , தென்பால்   - தென் பகுதி , திகழ் - மிகச் சிறப்பான ,   தீவி - கல் , வெளிநாட்டு செடிவகை , கோவார் ( கோ + வார் )   கோ - பசு , வார் - முலைக்கச்சு , கோலம் - வேடம் , தோற்றம் , கொள்கை - நிகச்சி தேவூர் என்னும் திருத்தலத்தில் தென்பகுதியில் சிறப்புமிக்க மரமான கல்லில் , பசுவின் முலையாக , அதாவது கன்றுக்கு பால் கொடுக்கும் வேடத்தில் தோன்றிய நிகழ்ச்சியும் என்று பொருள் . தேவூர் திருத்தலம் பற்றிய தகவல்கள்   தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் தே - கடவுள் , இறைவன் , அமர் - விரும்பி , இருக்கும் , சோலை - அழகிய , திருவா ரூரில் - திருவாரூர் என்னும் திருத்தலத்தில் , ஞாலம் - பூமி , தன்னை - இறைவனை , நல்கிய - அருள் செய்கின்ற , நன்மை - சிறப்பும் இறைவன் விரும்பி இருக்கும் அழகிய திருவாரூர் எனும் திருத்தலத்தில் , பூமியாக இறைவன் இருந்து அருள் செய்கின்ற சிறப்பும் என்று பொருள் . ...

திருஅண்டப்பகுதி விளக்கம் வரிகள் 10 - 14

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்   தெறியது வளியின் கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும் சூக்கம் - மிகவும் சிறிதாக , நுட்பமாக , தூலம் - விஷம் , சூறை - கழுத்தின் பின்குழி , மாருதம் - கோதை , பெண் , தெறி - விரலால் உந்துவது , வளி - சிறிது நேரம் , கொட்குதல் - மூர்ச்சித்தல் , மயக்கமடைதல்   பெயர் - தள்ளி விடுதல் , குழகன் - சிவன் , முழுவதும் - ஒப்பில்லாத பரம்பொருள் உலகத்தை காப்பாற்ற ஆலகால விஷத்தை மிகச்சிறியதாக , நுட்பமானதாக மாற்றி , அதை விழுங்கி , ஒப்பில்லாத பரம்பொருளான சிவன் சிறிது நேரம் மயக்கமடைந்தார் . உமையம்மை அந்த விஷத்தை விரலால் கழுத்தின் குழிப் பகுதியில் தள்ளிவிட்டார்   என்று மாணிக்கவாசகர் இங்கு குறிப்பிடுகிறார் . சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலுக்கு , 1977- ம் ஆண்டு காஞ்சி பெரியவர்   விஜயம் செய்தபோது , இக்கோவில் , விக்கிரகம் பற்றிய சிறப்புகளை எடுத்துக் கூறி அருளாசி வழங்கினார் . பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரின் திருவுருவம் அபூர்வம் என்றும் , தாம் கண்ட கண்கொள்ளாக் காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க ...

சிநேகிதனுக்காக சிவபெருமானே பிச்சை எடுத்த அற்புதம்!

சுந்தரரின் பசியை போக்க சிவபெருமானே திருவோடு ஏந்தி பிச்சை எடுத்த திருத்தலம் திருக்கச்சூர் ஆகும். சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது மறைமலைநகர். இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது  திருக்கச்சூர் . சிங்கபெருமாள் கோவிலில் இருந்தும் திருக்கச்சூருக்கு வரலாம். இங்கே பிரமாண்டமான ஆலயத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்  ஸ்ரீகச்சபேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மை. உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீதியாகேசப் பெருமான். சுந்தரர்  இந்தத் தலத்துக்கு வந்தபோது, பசியால் களைத்து மயக்கத்துடன் அமர்ந்தார். அப்போது வயோதிகராக வந்த சிவனார், என்ன வேண்டும் எனக் கேட்டார். ‘பசிக்கிறது. உணவுதான் வேண்டும்’ என்றார் சுந்தரர். உடனே திருவோடை எடுத்துக் கொண்டு, வயோதிகத் தோற்றத்திலேயே, வீடுவீடாகச் சென்று, ‘சிவனடியார் சுந்தரர் வந்திருக்கிறார். அன்னம் வழங்குங்கள்’ என்று கேட்டு, பிக்ஷை எடுத்து, உணவு கொண்டு வந்து கொடுத்தார். பிறகு பசியாறிய சுந்தரருக்கு, சிவனார், உமையவளுடன் ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார். கச்சபேஸ்வரர் மூலவராகவும் தியாகேசர் உ...