Skip to main content

சிவபுராணம் வரி 16 விளக்கம்


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

ஆராத என்றால் ஆரம்பமும் முடிவும் இல்லாத, எல்லையற்ற, தெவிட்டாத என்று பொருள். மனிதர்களுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷம் என்றாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அது நீடிக்கிறது. மகன் ஸ்டேட் ஃபஸ்ட் என்று மிக சந்தோஷமாக பெருமையாக சொல்லும் அம்மா அப்பா, அடுத்த இரண்டு மாதங்களில் இப்ப எல்லாம், பையன் ஒழுங்கா படிக்க மாட்டேங்கிறாங்க என்று புலம்புவார்கள். லாட்டரி மூலம் மிகப் பெரும் தொகை பரிசாக கிடைத்தவர்கள், சில நாள் சந்தோஷமாக இருப்பார்கள். பின்பு கேட்டால் பணத்திற்காக சுற்றியுள்ளவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள், தொந்தரவு செய்கிறார்கள் என்று பலவிதமாய் புலம்புவார்கள். ஆக எவ்வளவு பெரிய சந்தோஷம் என்றாலும் மனிதர்களுக்கு அது ஒரு சில நாட்கள், ஒரு சில மாதங்கள்  அல்லது சில வருஷங்களுக்கு மட்டுமே நிரந்தரம்.  நிரந்தரமான சந்தோஷம் பெற்றவர்கள் என்று எவருமில்லை. அப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஆராத அதாவது ஆரம்பமும் முடிவும் இல்லாத, எவ்வளவு கிடைத்தாலும் திகட்டாத இன்பத்தை அருள்பவன், மலையாய் இருக்கும் அண்ணாமலையான் என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.  மலை என்பது இங்கு அடிமுடி காண இயலாத, அக்னியாய் விளங்கும் அண்ணாமலையை குறிக்கிறது. ஆராத  இன்பத்தை பற்றி சொல்லும் பொழுது அடிமுடி காணாத அண்ணாமலையாரை மாணிக்கவாசகர் ஏன் சொல்லி இருக்கிறார் என்பதை பார்ப்போம். இறைவன் என்பவன் ஒளிவடிவம், இறைவனுக்கு உருவம் கிடையாது. வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை தியானம் அல்லது வேறு வகையான தியானம் செய்பவர்கள், அதில் உயர்ந்த நிலையான தலையிலிருந்து சில அடிகளுக்கு மேலாக நிறுத்தி தியானம் செய்யும் போது அற்புதமான ஒரு ஒளியை காணலாம். அந்த ஒளியை தியானத்தில் காணும்பொழுது, ஒரு அற்புதமான, இன்ப நிலை ஏற்படுவதை மனம் உணரும். அந்த தியானத்தின் போது தெரியும் ஒளியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, அதேபோல் அப்பொழுது கிடைக்கப்பெறும் உணர்வையும் அல்லது அன்பையும் வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை, இதை உணர மட்டுமே முடியும். இதற்கு சமமான நிலை, சில பேருக்கு  மகான்களை பார்க்கும் பொழுது கிடைக்கும். நமக்கு வீடு நிறைய, பணமும் தங்கமும் வைரம், வைடூரியம் கொட்டி இருந்தாலும்கூட கிடைக்காத ஒரு விஷயம் இந்த ஒளியை பார்க்கும் பொழுது கிடைக்கும்.  நிம்மதி அல்லது அமைதி அல்லது அன்பு என்று சொல்லக்கூடிய ஒரு நுண்ணிய உணர்வை மனம் உணரும். அப்பொழுது, மனதில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பதைபதைப்பு அல்லது ஏதோ ஒரு தேடல் அல்லது ஏதோ ஒரு வெறுமை சட்டென மறைந்து ஒரு நிறைவு கிடைக்கும். தலைக்கு மேலே சில அடி தூரத்தில் செய்யப்படும் தியானத்தில் அந்த ஒளியை உணரும் பொழுது கண்களில் கண்ணீர் பெருகும், ஆனால் மனது  அன்பினை, இன்பத்தினை உணரும். எப்படி அடி முடி காணாத, வரையறுத்துச் சொல்ல முடியாத  அக்னியாக இருக்கிறாரோ அதுபோல் இந்த தியானத்தில் அந்த ஒளியினை காணும்பொழுது கிடைக்கும் இன்பத்தை வரையறுத்தல் முடியாது. இதே இன்பம், அமைதி ஒரு சில மகான்களை பார்க்கும் பொழுதும் கிடைக்கும்.  என்ன, எப்படி என்று சொல்லமுடியாத ஒரு இன்பநிலை, கண்ணீர் பெருகும் நிலை ஏற்படும். நினைத்த உடன் முக்தி தரும் தலம் திருவண்ணாமலை என்று சொல்வது எதனால் என்றால், நாம் தியானத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்யும்பொழுது அந்த ஒளியை, நாம் இருக்கும் இடத்திலிருந்தே காணலாம். அந்த ஒளி காணப்பெறும் பொழுது மனம் அமைதி அடைகிறது, நமக்கு அந்த பக்குவநிலை கிடைக்கிறது, எனவே முக்தி தரும் அந்த மார்க்கத்தின் வழி நடப்போம். ஆராத இன்பம் அருள்பவன் நமது சிவன் என்று மாணிக்கவாசகர் சொல்லிவிட்டார். சரி, அதை எப்படி நாம் அடைவது என்பதுதான் நம் அனைவருக்குள்ளும் எழும் மாபெரும் கேள்வி? நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு எல்லாம் அந்த இன்பம் கிடைக்குமா? என்றெல்லாம் நமக்குள் தோன்றுகிறது. இதற்கு  பதில் நிச்சயம் கிடைக்கும்.  இறைவனின் திருவடிகளை சரணாகதி அடைந்து, நம்முடைய கடமைகளை அவனை நினைத்தவாறு செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் பதட்டம், கவலை, துன்பம் அனைத்தும் மறைந்து அங்கு ஓர் அமைதி தோன்றும். இதைத்தான் நிறையப்பேர் நிம்மதி என்று சொல்வார்கள். நம்மைப் போன்ற சாதாரண எத்தனையோ மனிதர்கள் இந்த அமைதியை பெற்றிருக்கிறார்கள் இந்த அமைதி பெறுவதற்கு முன்பு அவர்களும் நம்மைப் போல் எதையோ தேடி, ஓடி, அலைந்து, சலித்து பின்னரே இந்த அமைதியை பெற்றிருப்பார்கள். ஒருவர் தன்னிடத்தில் அளவிலாத செல்வம் இருக்கிறது என்றால் அதை அவர் பெரிய வீடு வைத்திருப்பதன் மூலம் , தான் அணியும் உடைகள் மூலம், நகைகள் மூலம் என பல வழியாக தன்னுடைய வசதிகளை மற்றவருக்கு காண்பிக்கலாம். ஆனால் மன நிம்மதி, மன அமைதி பெற்றவர்கள் தங்களுடைய இன்பத்தை மற்றவர்களுக்கு எந்த ஒரு வகையிலும் எடுத்துச் சொல்ல முடியாது. அதனால்தான் மற்றவர்கள் வைத்திருக்கும் காரை பார்க்கும்பொழுது, வீடு பார்க்கும் பொழுது அது போல் நமக்கு வேண்டும் என்று நினைக்கிறோம் . நிம்மதியை அமைதியை,  இறைவனை அவ்வாறு கண்ணால் பார்க்க முடியாததினால், அது எவ்வளவு பெரிய கிடைத்தற்கரிய உயர்ந்த பொருள் என்பதை நம்மால் உணர முடியவில்லை, எனவே அந்த அமைதி, அன்பு வேண்டும் என்று நாம் ஆத்மார்த்தமாக வேண்டுவது இல்லை. நாம் செய்யும் பாராயணங்கள், இந்த உணர்வை புரிந்து கொள்வதற்கு உரிய கருவியாக செயல்படுகிறது. ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலமாக இந்த விஷயத்தை இங்கே விளக்க முயற்சி செய்கிறேன். இன்றைய சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அதிகம், வேலைக்குச் சென்று மிக உயர்ந்த நிலையை அடைந்து நிறைய வருமானம் கிடைத்தாலும் அவர்களுடைய உள்மனதில் தங்கள் குழந்தைகளை கவனிக்கவில்லையோ என்கிற ஒரு ஆதங்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இது சில பேருக்கு குற்ற உணர்வாக மாறுகிறது. *ஆக நிறைவு என்பது ஒரு சில அடிப்படையான விஷயங்களை நாம் செய்வதால் மட்டுமே கிடைக்கிறது.* சில இல்லத்தரசிகள், அம்மாக்கள், அவர்களுக்கு குடும்பம் மட்டுமே உலகம். அவர்கள் நிறைய இடத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள், நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்திருக்காது. அவர்களுக்கு தெரிந்தது, எல்லாம் தங்களுடைய குடும்பம், அந்த குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்வது என்று ஒரு மனநிறைவுடன் இருப்பார்கள். இந்த நிலையில் இருப்பவர்களை, வேலைக்கு செல்பவர்கள் புரிந்துகொள்ள முடியாது ஏனெனில் இந்த நிலையில் இருப்பதற்கு ஒரு பக்குவ நிலை வேண்டும். அந்த பக்குவ நிலை ஒரு சில காலத்திற்கு பின்பு தான் நம் வாழ்க்கையில் நமக்கு புரியும். அந்த பக்குவ நிலையை அடைய நாம் தினமும் செய்யும் பாராயணங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.
யோகநிலை படி இதை சொல்ல வேண்டுமென்றால் சிவன் ஆதியோகியாக, ஆதி குருவாக இருப்பவன் என்று சொல்வார்கள். அதாவது சிவன் வெகு காலம் யோக நிலையிலேயே இருந்து அந்த யோக நிலையிலேயே, இன்பத்திலேயே மூழ்கியிருந்தார் என்று சொல்வார்கள். அதன்பின் சப்தரிஷிகள் வெகு காலம் காத்திருந்து கஷ்டப்பட்டு ஆதி குருவிடம் இருந்து யோகம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சிவன் தன் தலையில் கங்கையை வைத்திருக்கிறார் என்று நம் அனைவருக்கும் தெரியும். யோகத்தின் ஒரு நிலையை அடையும் பொழுது சகஸ்ர தளத்தில் இருந்து அமிர்தம் ஊற்றெடுக்கும் என்று யோக புத்தகங்கள் கூறுகின்றன. திருமந்திரத்தின்
 695வது பாடலும் தலையில் வரும் அமிர்தத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. 

இவ்வாறு சகஸ்ரதளத்தில் அமிர்தம் வருவது தலை உச்சியில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டுவது போல இருக்கும். அந்த நிலையில் கிடைக்கும் இன்பத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் என்பது கிடையாது. சிவனின் தலையில் கங்கை என்று நாம் குறிப்பிடுவது அவருடைய தலையில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் அமிர்தமே.  சிவன் எப்பொழுதும் யோகநிலையில் இருந்து கொண்டே இருப்பதனால் அவருடைய தலையில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமிர்தத்தை நாம் கங்கை என்று உருவகமாக சொல்கிறோம் என்றும் சொல்லலாம். யோகநிலையில் தலை உச்சியில் இருந்து அமிர்தம் வரும்பொழுது கிடைக்கும் இன்பத்தை தருபவன் சிவன். அதனால் ஆராத இன்பம் அளிக்கும் மலை போற்றி என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

தினமும் மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை நித்திய பிரதோஷம். இந்த பிரதோஷ வேளையில் சிவபுராணம் படிப்பது மிகவும் பயனளிக்கும். எனவே சிவபுராண பாராயண குழுவில் இருப்பவர்கள் தங்களால் முடிந்தால், நித்திய பிரதோஷ வேளையான 4:30 -6:00 ல் அரை மணி நேரமோ அல்லது அவர்களால் முடிந்த அளவு படிக்கவும். இது கட்டாயம் அல்ல. முடிந்தவர்கள் அந்த வேளையில் படிக்கவும். நிறைய அன்பர்கள் அந்த வேளையில் படிக்கும் பொழுது அது கூட்டுப்பாராயணம் ஆகவும் அமையும்.  *மற்றுமொரு பணிவான வேண்டுகோளையும், இந்தப் பதிவுடன் பதிவு செய்கிறேன். தற்போது நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலையால், நிறைய பேருக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி தீர வேண்டி, நாம் அனைவரும்,  தினமும் சரியாக மாலை 6 மணிக்கு, இடரினும் தளரினும் என்கிற பதிகத்தை, மனமார இறைவனை வேண்டி பொருளாதார நெருக்கடி தீர, ஒரு முறையோ அல்லது மூன்று முறையோ படிப்போம். இந்தப் பதிகம் மிக சக்திவாய்ந்த பதிகம், பொருளாதார நெருக்கடிகளை சந்திப்பவர்கள் இந்த பதிகத்தை பாராயணம் செய்வதால் பொருளாதார நெருக்கடி நிலை, கண்டிப்பாக மாறும்.*  ஓம் நமசிவாயா, திருச்சிற்றம்பலம்

Comments

Popular posts from this blog

ஏகன் அநேகன் இறைவன் வரிக்கு விளக்கம்

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ஏகன் என்றால் ஒருவன் , தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் என்று பொருள் . அநேகன் என்றால் பல உருவம் கொண்டவன் என்று பொருள் . சிவனை ஏகன் என்று சொல்லி , இதன் மூலம் சிவனை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என்று அழகாக சொல்கிறார் மாணிக்கவாசகர் . அதுமட்டுமன்றி அநேகன் என்று சொல்வதன் மூலம் இறைவன் பல்வேறு வடிவமாக , எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் என்று சொல்கிறார் . நமக்கு எல்லாம் தெரியும் , நம்முடைய சிவன் ,   ஒளி வடிவமாய் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறான் என்று . அறிவியல் பெருவெடிப்பு   தத்துவத்தின்படி (Big-Bang theory) ஒரு மிகப்பெரிய ஒளிப்பிழம்பு மிகப்பெரிய சத்தத்துடன் வெடித்து சிதறி அணுக்களாக பிரபஞ்சம் முழுதும் பரவியது . அதுவே நாளடைவில் உயிர்களாக பரிமாணம் எடுத்தது என்று பெருவெடிப்பு தத்துவம்   சொல்கிறது . எனவே அறிவியல் தத்துவத்தின் படி பார்த்தாலும் இறைவன் பல்வேறு வடிவமாக எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறான் . இந்த வரியை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம் . ஏகன் என்கிற வ...

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் வரிக்கு விளக்கம்

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க பிஞ்ஞகன் என்றால் அழிப்பவன் என்று பொருள் . பிறப்பறுக்கும் என்றால் பிறவித் தளையை அறுத்தல் என்று பொருள் . பெய் என்றால் மேலிருந்து பொழிதல் என்று பொருள் . பெய்கழல்கள் என்றால் நமக்கு மேலே இருந்து கருணை மழை பொழிபவனின் திருப்பாதங்கள் என்று பொருள் . அடுத்த பிறவி இல்லாமல் இருப்பது ஏன் மிகவும் உயர்வாக கருதப்படுகிறது என்று ஒருசிலருக்கு புரியாத புதிராக இருக்கிறது . இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு புரியுமாறு சொல்லவேண்டுமென்றால் , இன்னும் ஒரு 70 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பிறந்தால் நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் . தண்ணீர் பற்றாக்குறை , மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ஏட்டுக் கல்வி ,   அந்தக் கல்வியைப் பெற நாம் படும் துன்பங்கள் , நல்ல துணையை தேடி திருமணம் செய்து , பிறகு குழந்தை பிறந்த பிறகு அவர்களை நன்மக்களாக அடுத்த நூற்றாண்டில் வளர்ப்பதில் உள்ள கஷ்டங்கள் , உணவே மருந்தாக இருக்கும் நிலைமை மாறி மருந்தே உணவாக இருக...

பாண்டூர் வைத்தீஸ்வரன் ஆலயம் - கீர்த்தி திருஅகவல் கதை

பாண்டூர்   வைத்தீஸ்வரன்   ஆலயம் -சாந்திப்பிரியா- மிக்க நன்றி சாந்திப்பிரியா அவர்களே, உங்கள் தகவல் மிக மிக உபயோகமாக இருந்தது https://santhipriya.com/2018/04/மூன்றாவது-வைத்தீஸ்வரன்-ஆ.html மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது.    மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்...