விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
விலங்கு - தளைகள், மனம் - ஒருவரின் எண்ணம், உணர்வு போன்றவற்றுக்குக் காரணமாக அல்லது இருப்பிடமாக அமைவது, விமலா என்றால் மாசற்றவன் என்று பொருள்,உனக்கு - உன்னை (இறைவனை); கலந்த - ஒருமித்துக் கலக்க ஆகி - அடையும் வழி, அன்பு - பக்தி, அன்பு, கசிந்து - வெளிப்படுவாய், உள் - உள்ளே, அகத்தில், உரு - ஆன்மா,
நலம் தான் இலாத - உய்வில்லாத ஆன்மாவாய் (நலம் - உய்வு, தான் - ஆன்மா, ) சிறியேன் என்றால் அற்பன் மற்றும் இழிந்தோன் என்று பொருள், நல்கி - பொருள் இல்லாத மற்றவற்றை கொடுத்தல், அருள்செய்தல், நிலம் தன் - பெருந்துறையை குறிக்கிறது, (தன் - குறிப்பிட்ட ), மேல் - உயர்ந்தவன், எல்லோருக்கும் தலைவன், வந்து அருளி - வந்து அருள் செய்து, நீள் என்றால் ஒளி, கழல்கள் - பாதங்கள், நீள் என்றால் ஒளி, கழல்கள் - பாதங்கள், நாய் என்றால் நாய் என்னும் விலங்கு அல்ல அற்பன் மற்றும் இழிந்தவன் என்று பொருள், கடை- தாழ்ந்தோன், கீழ்மை, அடியேன் - தன்னைத் தாழ்த்திக் குறிப்பிடும் ஒரு பணிவு மொழி, சிறந்த - (தரத்தில்) உயர்ந்த(பலவற்றுள்) மேலோங்கி விளங்குகிற, தயா - அன்பு , தத்துவனே - பரமான்மா, பரம்பொருள், உண்மைப்பொருளே.
“அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி” என்கிற வரிக்கு விளக்கமாக பெரும் நங்கூர கயிற்றினால், கப்பலை, கரையில் நிலைநிறுத்த பிணைத்திருப்பது போல், நமது பிறவி, எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற நங்கூர கயிற்றினால் பிணைக்கப்பட்டு நாம் பிறவிக் கடலை நீந்தி கடக்க முடியாமல் கரையிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்று பார்த்தோம். அதையே மாணிக்கவாசகர் “விலங்கு மனத்தால்” என்று சொல்லி, இங்கு மீண்டும் வலியுறுத்துகிறார். விலங்கு மனத்தால் என்றால் எண்ணங்கள் என்கிற தளையால் பிணைக்கப்பட்டிருக்கிற என்று பொருள். எண்ணங்களால் நிறைந்திருக்கிற மனதை கொண்டு, மாசற்றவனான இறைவனை அடைவதற்கு வழி, அந்த மனதில் அன்பை கலப்பது என்கிறார் மாணிக்கவாசகர். நம்முடைய அன்பினால், அகத்தின் உள்ளே ஆன்மாவாய் ஓளிந்திருக்கும் இறைவன் வெளிப்படுவான் என்று “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் கூறுகிறார். உய்வு இல்லாத ஆன்மாவான, இழிந்தவனான எனக்கு அருள் செய்தான் இறைவன் என்று “நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி” என்கிற வரிகள் மூலம் மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். தன் என்றால் குறிப்பிட்ட என்று பொருள், நிலம் என்றால் இடம் என்று பொருள், மேல் என்றால் தலைவன் அல்லது உயர்ந்தவன் என்று பொருள். சிவன் குருவாக, திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகருக்கு அருளியதை, “நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி” என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். இறைவனைப் பற்றிச் சொல்லும் பொழுது மிக உயர்த்தியும் தன்னைப் பற்றிச் சொல்லும் பொழுது மிகவும் தாழ்வாகவும் சொல்கிறார். அப்படிப்பட்ட தாழ்வான எனக்கு, உன்னுடைய ஒளிமிகுந்த திருவடிகளை காட்டினாயே என்று மனம் உருகுகிறார். நாய் என்றால் நாய் என்னும் விலங்கு அல்ல, அற்பன் மற்றும் இழிந்தவன் என்று பொருள். “நாயிற் கடையாய்” என்றால் இழிந்தவனுக்கு இழிந்தவன் என்று பொருள். அடியேன் என்கிற சொல்லும் தன்னை இறைவன் முன் தாழ்த்தி சொல்லும் ஒரு பணிவான வார்த்தை. தத்துவனே என்றால் பரமான்மா, பரம்பொருள் என்று பொருள். தாயை விட அதாவது அம்மாதான் ஒருவருக்கு உலகத்திலேயே மிகச் சிறந்தவர் என்று மறைமுகமாக சொல்லி, அந்தத் தாயை விட மேலோங்கி நிற்கின்ற பராபரனே, பரம்பொருளே என்று மிக அற்புதமாக குறிப்பிடுகிறார். பரம் என்றால் பிறவி இல்லாதவன் என்று பொருள். பரன் என்றால் கடவுள். அதாவது பரம்பொருள் என்றால் பிறவி நீக்கம் பெற்ற இறைவன் என்று பொருள். தத்துவம் என்றால் உண்மைப்பொருள் என்றும் ஒரு பொருள் வரும். அதாவது கடவுள் மட்டுமே உண்மை பொருளாக விளங்குகிறான் பிறவி சுழற்சியில் மாட்டிக்கொண்டு திரும்பத்திரும்ப பிறவி எடுக்கும் அனைத்து உயிரினங்களின் ஆன்மாக்களும் மாயையே என்று இங்கு மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். அதாவது நாம் எல்லாம் வெறும் மாயை என்பதை தெளிவாக இங்கு நமக்கு எடுத்துரைக்கிறார்.
நம் ஆன்மாவுக்கும் இறைவன் ஒளிந்திருக்கிறான் என்று மாணிக்கவாசகர் திரும்பத் திரும்ப சொல்கிறார்.அப்படி ஒளிந்திருக்கும் இறைவனை “மறைந்திட மூடிய மாய இருளை” என்றும், இறைவ்ன் வெளியே வர வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி அன்பு என்றும் “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற வரிகளில் சொல்கிறார். இதே கருத்து கந்தகுரு கவசத்தில், “ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு, இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று” என்கிற வரியில், நம் உடலுக்குள், கலப்பின்றித் தூய்மையாய் இருக்கும் ஆன்மாவாகிய இறைவனை உணர்ந்து, அவனிடம் அன்பு செலுத்தும் அடியவரை, மேன்மையாக்கி, உயர்நிலையை அடைய செய்து, அடியவரின் சிந்தனையுள், இனிமையான திரவமாய், இறைவன் ஊற்று போல் சுரந்துகொண்டே இருப்பார் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கந்தகுரு கவசத்தின் வரிகளும், திருவாசகம் சொல்வதையே வலியுறுத்துகிறது . இறைவனிடம் அன்பு காட்டினால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பதையும், நாம் இறைவனிடம் அன்பு காட்ட காட்ட, அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் அனைத்தும் அன்பாக மாறி விடுகிறது என்பதை கீழ்க்கண்ட வரிகள் மூலம் கந்தகுருகவசம் சொல்கிறது. அதுமட்டுமன்றி கந்தகுரு கவசத்தின் 369 வரின், மிகத்தெளிவாக “திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்” என்கிறது.
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280
ஆக திரும்பவும் நமக்குள் எழும் ஒரே கேள்வி, இறைவனிடம் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் எப்படி அன்பு செலுத்துவது? சமீபத்தில் ஒரு சித்தர் சொன்னாதாக வாட்ஸ்ஆப்பில், ஒரு வீடியோ வலம் வந்தது. அந்த வீடியோவில் இறைவன் நமக்குள் இருப்பதாக எண்ணி, தினமும் குளிக்கும் பொழுது ஒரு சொம்பு தண்ணீரில் ஓம் என்று எழுதி அதை இறைவனுக்கு அபிஷேகம் செய்வது போல் நம் மேல் ஊற்றிக் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருப்பார். ஏற்கனவே நம்முடைய குழுமத்தில் பதிவு செய்து இருந்தார் போல், ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் இறைவனை மானசீகமாக நினைத்து, அவனுக்கு கொடுத்துவிட்டு, நன்றி சொல்லி விட்டு சாப்பிடவேண்டும் என்று பதிவு செய்திருந்தேன். திரும்பவும் அதை வலியுறுத்துகிறேன். குளிக்கும்பொழுது இறைவன் நமக்குள் இருப்பதாக நினைத்து தண்ணீரை அபிஷேகம் போல் ஊற்றுவதும், சாப்பிடும் பொழுது இறைவனை நினைப்பதும், நமக்கு நாமே, தினமும் இறைவன் இருப்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும் ஒரு ஆரம்பகால செயல். மனிதர்களான நமக்கு மறதி என்கிற ஒரு விஷயம் இருக்கிறது இதனால் நாம் எளிதில் சில விஷயங்களை மறந்து விடுவோம். தினமும் குளிக்கும் போதும், சாப்பிடும் போதும் நினைக்கும்பொழுது, இறைவன் நமக்கு பல்வேறு விதங்களில் நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்டுவதே உணரும் ஒரு பாக்கியம் ஏற்படும். இவ்வாறு உணரும் பொழுது யாரும் சொல்லாமலேயே நமக்கு நாமே நம்முடைய அனுபவத்தினால், இறைவனை குளிக்கும்பொழுது மட்டுமல்ல ,சாப்பிடும்பொழுது மட்டுமல்ல மற்ற பல நேரங்களிலும் நினைப்போம். இது போன்ற விஷயங்களை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும்.
நம் அனைவரையும் ஒன்றினைத்து பலவிதமான எண்ணங்களால் நிறைந்திருக்கும் நம் மனதில், முகம் தெரியாத ஒருவருக்காக பிரார்த்தனை செய்ய வைத்து, நம் மனதில் அன்பை கலக்க வழி ஏற்படுத்தி, “கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்” என்கிற மாணிக்கவாசகரின் வரிகளை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த இறைவனின் திருப்பாதங்களை அன்புடன், நன்றியுடன், பணிந்து வணங்குவோம்! போற்றுவோம்! இறைவனை உணர்வோம்!
Comments
Post a Comment