மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
மாசற்ற - கருமையற்ற, மங்காத சோதி - ஒளி, மலர்ந்த - தோன்றிய,
மலர்ச்சுடரே - மலர் என்றால் மிகப் பிரகாசமான, சுடர் என்றால் ஒளி,
தேசன் - ஒளிமயமாயுள்ளவன், பெரியோன், தேன் - தேன், ஆர்அமுதே - ஆர் என்றால் அரிய, ஆர்அமுதம் என்றால் அரியஅமுதம், புரம் - நகரம், ஊர், பாசம் - மும்மலம், ஆணவமலம், பற்று - இல்வாழ்க்கை, அறுத்தல் - நீக்குதல், இல்லாமற் செய்தல்,
பாரி - கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல், ஆரியன் -கழைக்கூத்தன்,
நேசம் - ஆர்வம், நெஞ்சம் - மனம், வஞ்சம் - மாயை, கபடம், பொய் ,
கெடுத்தல் - நீக்குதல், காணாமற் போகுதல், பே - பெரும், ஆது - தோணி, கட்டுமரம், பேராது என்றால் பெரிய மிதவை, தெப்பம், கட்டுமரம் என்று பொருள் . பே என்ற என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர், பேராசிரியர், ஆணை, பேராணை என்ற சொற்களை நாம் சொல்லலாம். நின்ற - நிலைத்த பொருள், எப்பொழுதும், ஆறு - நதி, நீர் வழி
தீ என்பது எப்போது எரிந்தாலும் அதில் கரித்துகள்கள் (carbon) மற்றும் கருமை வருவதை தடுக்க இயலாது. ஆனால் இறைவன் தீயாக இருந்தாலும், அதாவது அக்னியாக ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும் அதில் கருமை மற்றும் கரித்துகள்கள் இல்லாமல் மாசற்றவனாக, கருமை அற்றவனாக, மங்காத, பேரொளியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான் என்று மாசற்ற சோதி என்ற வரியில் மாணிக்கவாசகர் கூறுகிறார். இறைவன் திருவண்ணாமலையில் அக்னியாக தோன்றியவன் ஆனதால் மாணிக்கவாசகர் இங்கே, மலர்ந்த மலர்ச்சுடரே என்று குறிப்பிடுகிறார். அதாவது தோன்றிய பிரகாசமான ஒளியே என்று இறைவனை வர்ணிக்கிறார். மேலும் அவர் இறைவனை, பெரியோனே, ஒளிமயமானவனே, தேனே, அரிய அமுதமாக இருப்பவனே , சிவபுரம் என்கிற நகரத்தை சேர்ந்தவனே என்றெல்லாம் தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே என்ற வரியில் வர்ணிக்கிறார். தேன் என்று ஏன் சொல்லி இருக்கிறார் என்றால் அதற்கு இணையான வேறு திரவம் உலகில் இல்லை. அதுமட்டுமல்ல தேனை நம்ம செயற்கையாக உற்பத்தி செய்ய இயலாது, எனவே மாணிக்கவாசகர், இங்கு இறைவனை தேனே என்று சொல்வது மிகப் பொருத்தமானதாகும். அதேபோல் அமுதம் என்று குறிப்பிடும் பொழுது வெறும் அமுதம் என்று குறிப்பிடாமல் அரிய அமுதம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தேவர்களுக்கு கிடைத்த அமுதம் இவன் இல்லை, அதை விடவும் அரிய அமுதம் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் தேர்ந்து எடுத்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் மிக ஆச்சரியமாய் இருக்கிறது. உலகத்தில் நமக்குத் தெரிந்த பொருட்களில், மிக உயரிய பொருட்களைக் கொண்டே மாணிக்கவாசகர் இறைவனை வர்ணித்திருக்கிறார். ஆணவம், கர்வம், இல்வாழ்க்கை போன்றவற்றையெல்லாம் அறுத்து அதாவது அவைகளை நம்முள் இல்லாமல் செய்கிறான் என்று “பாசமாம் பற்று அறுத்துப்” என்பதன் மூலம் சொல்கிறார் மாணிக்கவாசகர். பாரி என்றால் கொட்டுமுழக்குடன் புரியும் இராக்காவல், ஆரியன் என்றால் கழைக்கூத்தன் என்று பொருள். மனிதர்களின் பிறவித் தளையை அறுத்து, நம்மை பிறவிச் சூழலில் இருந்து விடுவித்த சந்தோஷத்துடன் சிவனவன் நடுஇரவில் கழைக்கூத்தாடுகிறான் என்று மாணிக்கவாசகர் வர்ணிக்கிறார். சிவன் நடுஇரவில் சாம்பலைப் பூசிக்கொண்டு, கழைக்கூத்தாடுவதற்கான காரணம் புரிந்த பொழுது, நம்முடைய இறைவன் சிவன், நம் மேல், உயிர்கள் மேல் எத்தனை அன்புடன் இருக்கிறான் என்று புரிந்த பொழுது கண்ணீர் கசிந்தது. நம்மேல், உயிர்கள் மேல் அன்பாய் இருக்கும், அந்த அற்புதமான இறைவன் மேல், நாமும் அன்பு செலுத்தக் கற்றுக் கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் இறைவன் மேல் அன்பு செலுத்தக் கற்றுக் கொடுப்போம். இறைவன் என்பவன், நம்முடனே, நம்முள்ளே, நமக்காக தாயாய் தந்தையாய், தோழனாய் தோழியாய், குருவாய் நமக்கு பலவிதமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறான். அதனை நாமும் உணர்ந்து நம் குழந்தைகளுக்கும் உணர்வதற்கு சொல்லிக் கொடுப்போம். சிவபுராணத்தை திருவாசகத்தை, குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். திருவாசகம் என்ன கொடுக்கும்? காசு கொடுக்குமா? வீடு கொடுக்குமா? கார் கொடுக்குமா? என்று கேட்பவர்களுக்கு, இவை அனைத்தும் உள்ள அனேகம் பேரை நம் வாழ்வில் சந்திக்கிறோம். ஆனால் இவர்கள் அனைவருமே ஒரு முழுமை அடையாமல், நிறைவு அடையாமல், இருப்பதைதான் நாம் பார்க்க முடியும். இறைவனை உணரும் பொழுது, மனம் அடங்கும், “வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க” என்கிற வரியின் பொருள் புரியும். இந்த நிறைவை, திருப்தியை எடுத்துச் சொல்வதற்கு வார்த்தைகளுக்கு வலிமை கிடையாது. இதை அனுபவிக்கும் பொழுது மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இனி ஒவ்வொரு முறையும் “பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே” என்று பாடும்பொழுது, படிக்கும் பொழுது நம் மனக்கண்முன் நமக்காய் கழைக்கூத்து ஆடும் இறைவன் தெரியட்டும், இறைவனின் அன்பு புரியட்டும் . இறைவன் நம் மேல் ஆர்வம் கொண்டு நம்முடைய கபடம், பொய், மாயை எல்லாவற்றையும் நீக்குகிறான் என்பதை நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட என்கிற வரியில் மிக அழகாக மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாது நாம் பிறவிக் கடலை கடப்பதற்காக மிகப்பெரிய தெப்பமாய், மிதவையாய் அவனுடைய பெருங்கருணை என்கிற பெரிய ஆற்றில் நமக்காக எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறான் என்று, பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே என்கிற வரியில் மிக அழகாக பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர். “அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி” என்கிற வரிக்கு விளக்கமாக பெரும் நங்கூர கயிற்றினால், கப்பலை, கரையில் நிலைநிறுத்த பிணைத்திருப்பது போல், நமது பிறவி, எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்கிற நங்கூர கயிற்றினால் பிணைக்கப்பட்டு நாம் பிறவிக் கடலை நீந்தி கடக்க முடியாமல், நம்மை கரையிலேயே நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்று பார்த்தோம். பிறகு, “விலங்கு மனத்தால்” என்று பார்த்தோம் அதாவது மனம், எண்ணம் என்னும் தளைகளால்,விலங்கால் பிணைக்கப்பட்டு இருப்பதாகப் பார்த்தோம். பாராயணத்தின் மூலம், நாம ஜெபத்தின் மூலம் இந்த எண்ண தளைகளில் இருந்து விடுபட முயற்சி செய்வோம். அப்படி நம்முடைய எண்ண தளைகளில் இருந்து, நாம் விடுபடும் பொழுது நம்மை காப்பாற்றி அழைத்துச் செல்ல, பெரும் கருணையோடு இறைவன் காத்திருக்கிறான் என்பதை மாணிக்கவாசகர் மிக அழகாக “பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே” என்கிற வரியில் சொல்கிறார். இதுவரை நாம் பார்த்த சிவபுராணம் வரிகள் மட்டுமே, நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் மிக அழகாக, எளிமையாக சொல்லிவிட்டது.
Comments
Post a Comment